பதிவு செய்த நாள்
22 மே2013
00:18
அரசின் நிர்வாக ஒப்புதல் இல்லாமல், "வீட்டை சொந்தமாக்குங்கள்' திட்டத்தின் கீழ், போலீசாருக்கு அடுக்கு மாடி வீடுகள் கட்டியதால், 90 லட்சம் ரூபாய் முடங்கியதுடன், 20 லட்சம் ரூபாய்க்கு மேல், வட்டி இழப்பு ஏற்பட்டுள்ளதாக, தணிக்கைத் துறை குற்றம் சாட்டியுள்ளது.
வீட்டு வசதி:தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக் கழகம் மூலம், போலீசாருக்கான, "வீட்டை சொந்தமாக்குங்கள்' திட்டத்தின் கீழ், வீடுகள் கட்டிக் கொடுக்கப்படுகின்றன. இத் திட்டத்திற்கான நிதி, ஒதுக்கீட்டாளர்களுக்கு வழங்கப்படும் கடனாக, அரசால் வழங்கப் படுகிறது.வீட்டின் மொத்த விலைக்கும், ஒதுக்கீட்டாளர்களுக்கு வழங்கப்படும் கடன் தொகைக்கும் இடையிலான வித்தியாசத் தொகை, ஒதுக்கீட்டாளர்களிடம் இருந்து வைப்புத் தொகையாக வசூலிக்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ், சென்னையின் புறநகர் பகுதியான, திருமுல்லைவாயிலில், போலீசாருக்கு குடியிருப்புகள் கட்டுவதற்காக, அப்பகுதியில் உள்ள நன்கொடையாளரிடம் இருந்து, 1.17 ஏக்கர் நிலத்தை பெற்றுக் கொள்ள, 2000ம் ஆண்டு அரசு அனுமதித்தது. தொடர்ந்து, நிர்வாக ஒப்புதலை பெற்ற பின், நான்கு உயர் வருவாய் பிரிவு மற்றும், 10 மத்திய வருவாய் பிரிவிற்கான அடுக்குமாடி வீடுகளை கட்டுவதற்கு, 1.02 கோடி ரூபாய்க்கு நிதி ஒப்புதலை, 2006ம் ஆண்டு வழங்கியது.
தேர்வு:இதற்கான நிர்வாக ஒப்புதலை, வழங்கும்படி, அரசிடம், காவலர் வீட்டு வசதிக் கழகம் கோரியது.பொதுவாக, அரசின் நிர்வாக ஒப்புதல் மற்றும் பயனாளிகளை தேர்வு செய்து, வைப்புத் தொகை வசூலிக்கப்பட்ட பின்பு தான், திட்டப் பணிகள் துவக்கப்பட வேண்டும்.ஆனால், இத்திட்டத்தை, எந்த ஒப்புதலும் பெறாமல், 2007ம் ஆண்டு துவக்கி, 2009ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது.
அரசின் நிர்வாக ஒப்புதல் பெறப்படாததால், அடுக்குமாடி வீடுகள் இன்று வரை, ஒதுக்கீடு செய்யப்படாமல் உள்ளன. இதையடுத்து, தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு, காவலர் வீட்டு வசதிக் கழகத்திற்கு அரசு உத்தரவிட்டது.இந்நிலையில், கடந்தாண்டு, மத்திய தணிக்கைத்துறை, ஆய்வு நடத்தி, நிர்வாக ஒப்புதல் இல்லாமல், கட்டியதால், மூன்றாண்டுகளாக, 90.25 லட்சம் ரூபாய் முடங்கியிருப்பதாகவும், இதனால், 20.45 லட்சம் ரூபாய் வட்டி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
நோக்கம்:இதனால், இடம் பெறப்பட்ட நோக்கம் நிறைவேறவில்லை என்றும் தணிக்கை துறை தெரிவித்தது.இதுகுறித்து, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம், அரசிற்கு விவரம் தெரிவிக்கப்பட்ட நிலையில், இதுவரை பதில் பெறப்படவில்லை என்றும் தணிக்கை துறை கூறியுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|