பதிவு செய்த நாள்
22 ஜூன்2013
05:59
புதுடில்லி:தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியம், சந்தாதாரர்களுக்கு பணத்தை திரும்ப அளிப்பதற்கான காலக் கெடுவை, 30 நாட்களில் இருந்து, 3 நாட்களாக குறைக்க திட்டமிட்டுள்ளது.
புதிய கணக்குகள்:இந்த நிதியம், 8 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்களின், 5 லட்சம் கோடி ரூபாய்அளவிலான, ஓய்வூதிய நிதியை கையாண்டு வருகிறது. நாடு முழுவதும் உள்ள, இந்நிதியத்தின் அனைத்து கிளைகளையும், கணினியில் ஒருங்கிணைப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.சமீப ஆண்டுகளாக அதிகரித்து வரும், சந்தாதாரர்களின் எண்ணிக்கை, பணி மாற்றத்தினால் உருவாகும் புதிய கணக்குகள், பணம் கோரும் மனுக்கள் பெருகி வருவது போன்றவற்றால், இந்நிதியத்தின் பணிச் சமை அதிகரித்துள்ளது.இதனால், ஓய்வு பெற்ற சந்தாதாரர்களுக்கு, விதிமுறைப்படி, 30 நாட்களுக்குள் பணத்தை பட்டுவாடா செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பண பட்டுவாடா:சென்ற 2012-13ம் நிதியாண்டில், இந்நிதியம், 1.08 கோடி சந்தாதாரர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு கண்டுள்ளது. அதே சமயம், 12.60 லட்சம் கோரிக்கை மனுக்களுக்கு, 30 நாட்களுக்குள் தீர்வு வழங்க முடியவில்லை. இவற்றில், 1.41 லட்சம் சந்தாதாரர்களுக்கு, 3 மாதங்களை கடந்த பிறகும் பணப் பட்டுவாடா செய்யப்படவில்லை. சென்ற நிதியாண்டில், மொத்தம் வந்த கோரிக்கை மனுக்களில், 10 சதவீத மனுக்களுக்கு மட்டுமே, 3 நாட்களில் தீர்வு காணப்பட்டுள்ளது.
அதே சமயம், நடப்பு 2013-14ம் நிதியாண்டில், ஏப்ரல் முதல் ஜூன் 11ம் தேதி வரையிலான காலத்தில், நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள், 15.66 சதவீத கோரிக்கை மனுக்களுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது.இதே காலத்தில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியத்தின், 19 பிராந்திய அலுவலகங்கள், 61 சதவீதத்திற்கும், மேற்பட்ட கோரிக்கை மனுக்களை உடனுக்குடன் பரிசீலித்து, 3 நாட்களில் பணத்தை திரும்ப அளித்து உள்ளன. இவற்றில், 10 அலுவலகங்கள், 90 சதவீதத்திற்கும் அதிகமான மனுக்களை, 3 நாட்களில் பைசல் செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஒப்புதல்:எனினும், சந்தாதாரர்களிடம் இருந்து வரும், அனைத்து கோரிக்கைகளையும் 3 நாட்களில் பைசல் செய்ய, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியம் திட்டமிட்டுள்ளது. தற்போது, ஒரு சந்தாதாரரின் ஓய்வூதிய நிதி தொடர்பான மனுவுக்கு, 47 அதிகாரிகளிடம் தனித் தனியாக ஒப்புதல் பெற வேண்டிய நிலை உள்ளது. இதில் ஏற்படும் காலதாமதம் காரணமாகவே, நிர்ணயிக்கப்பட்ட நாட்களுக்குள், மனு மீது தீர்வு காண முடியாத நிலை ஏற்படுகிறது என, அர” அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
"இருந்தபோதிலும், 3 நாட்களில் ஒரு மனுவிற்கு தீர்வு காண்பதை சாத்தியமாக்கலாம்' என, இ.பி.எப்.ஓ-வின் தலைமை கணக்கு அதிகாரியும், நிதி ஆலோசகருமான சஞ்சய்குமார் தெரிவித்துள்ளார்.இத்திட்டம் தொடர்பாக விவாதிக்க, இவரது தலைமையில், இ.பி.எப்.ஓ-வின், அனைத்து பிராந்திய உயரதிகாரிகளின் கூட்டம் வரும் ஜூலை மாதம் டில்லியில் நடைபெற உள்ளது. இதில், கோரிக்கை மனுக்களுக்கு, 3 நாட்களில் தீர்வளிப்பதற்கான செயல் திட்டம் வகுக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
முயற்சி:நடப்பு நிதியாண்டில், 1.20 கோடி சந்தாதாரர்கள், ஓய்வூதிய நிதி கோரி மனு அளிப்பார்கள் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில், 80 சதவீத மனுக்களை 3 நாட்களில் முடிக்க இ.பி.எப்.ஓ., திட்டமிட்டு, அதற்கான முயற்சிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன என, அந்த அதிகாரி மேலும் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|