பதிவு செய்த நாள்
01 ஜூலை2013
00:55
மும்பை:டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பு சரிவடைந்துள்ளதால், நடப்பு 2013ம் ஆண்டில், ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாத காலத்தில், வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்.ஆர்.ஐ.,), இந்தியாவிற்கு அனுப்பிய தொகை, கடந்த ஆண்டின் இதே காலத்தில் அனுப்பியதை விட, 12-15 சதவீதம் அதிகரித்துள்ளதாக, இத்துறையைச் சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ரூபாய்மதிப்பு சரிவை சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் வகையில், வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்தியாவிற்கு அனுப்பிய தொகை சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது. கடந்த 2012ம் ஆண்டில், வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்தியாவிற்கு அனுப்பிய தொகை, 6,935 கோடி டாலராக இருந்தது.இந்நிலையில், கடந்த ஒரு சில மாதங்களாக, டாலருக்கு எதிரான ரூபாய்மதிப்பு, தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. குறிப்பாக, சென்ற வாரத்தில் இதன் மதிப்பு, 60 ரூபாய்க்கும் மேல் வீழ்ச்சி கண்டது. எனவே, இந்த நிலை தொடரும் பட்சத்தில், வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனுப்பும் தொகை மேலும் அதிகரிக்கும்.
இதுகுறித்து, துபாய்நாட்டில் பணிபுரியும் ஒருவர் கூறியதாவது:ரூபாய்வெளிமதிப்பு சரிவடைந்துள்ளதால், இந்தியாவில் வாங்கியுள்ள வீட்டு கடனை திரும்பச் செலுத்துவதற்காக, அலுவலகத்தில், வட்டி இல்லாத கடனுக்கு விண்ணப்பித்துள்ளேன். இத்தொகை கிடைத்த உடன், வீட்டு கடனை அடைக்க திட்டமிட்டு உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.தற்போதைய நிலையில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனுப்பும் தொகை, 4 சதவீதம் என்ற அளவில் உள்ளது.வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனுப்பும் தொகை தவிர, கடந்த 2011-12ம் நிதியாண்டில், அன்னிய நிதி நிறுவனங்கள், இந்தியாவில் மேற்கொண்ட முதலீடு, 4,684 கோடி டாலராக இருந்தது. இது, இந்தியாவில், முதலீடு செய்வது மிகவும் பாதுகாப்பானது என்பதை உணர்த்துவதாக உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|