பதிவு செய்த நாள்
03 ஆக2013
00:23
மும்பை:அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, நேற்று மேலும் சரிவடைந்தது.
நேற்று முன்தினம், ரூபாய் மதிப்பு, 60.45 ஆக இருந்தது.இந்நிலையில் நேற்று, அன்னியச் செலாவணி வர்த்தகம் துவங்கியதும், ரூபாய் மதிப்பு, 60.61 ஆக சரிவடைந்தது. இது பின், 61.15 - 60.90 என, அதிக ஏற்ற, இறக்கமாக இருந்தது.வர்த்தகத்தின் இறுதியில், ரூபாய் மதிப்பு, முன்தினத்தை விட, 65 கா” சரிவடைந்து, 61.10ல் நிலை பெற்றது.
அமெரிக்கா:நேற்று முன்தினம், அமெரிக்க மத்திய வங்கி, நாட்டின் பொருளாதாரம் வலுப்பெறும் வரை, மாதந்தோறும், 8,500 கோடி டாலர் மதிப்பிற்கு, கடன் பத்திரங்களை வாங்கும் திட்டம் தொடரும் என்று தெரிவித்தது.நேற்று, அமெரிக்காவின் தயாரிப்பு துறை குறித்த புள்ளி விவரம் வெளியானது. அதில், கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, அந்நாட்டின் தயாரிப்பு துறை, வளர்ச்சி கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் அமெரிக்காவில், வேலை இல்லா திண்டாட்டம், கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்திருக்கும் என்ற தகவலும் வெளியானது.இது போன்ற காரணங்களால், இந்திய ரூபாய் உள்ளிட்ட, சர்வதேச கரன்சிகளுக்கு எதிரான டாலர் மதிப்பு, கடந்த இரண்டு நாட்களாக வேகமாக உயர்ந்து வருகிறது.ரூபாய் மதிப்பின் சரிவை தடுக்க, ரிசர்வ் வங்கி, வியாழனன்று, பங்கேற்பு ஆவணங்கள் வாயிலான ஊக வணிகத்திற்கு, கட்டுப்பாடு விதித்தது. இதன்படி, அயல்நாட்டு முதலீட்டாளர்களின் அனுமதிக்கு பின்பே, பங்கேற்பு ஆவணங்கள் மூலம், முதலீட்டு நிறுவனங்கள் முன்பேர ஒப்பந்தம் மேற்கொள்ள முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
ஜப்பான்:இத்துடன், ரிசர்வ் வங்கியும், கடந்த இரண்டு நாட்களாக, அதிக அளவில் டாலரை புழக்கத்தில் விட்டது.இருந்தபோதிலும், ரூபாய் மதிப்பின் சரிவு தொடர்கதையாக உள்ளது. கடந்த ஜனவரி முதல் தற்போது வரை, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, 9.39 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. அதிக மதிப்பிழந்த ஆசிய கரன்சிகளின் பட்டியலில், ஜப்பானின் யென் முதலிடத்திலும், இந்திய ரூபாய் இரண்டாவது இடத்திலும் உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|