பதிவு செய்த நாள்
20 ஆக2013
02:33
புதுடில்லி:கடந்த நான்கு மாதங்களில், இந்திய ரயில்வேயின், விளைபொருள் சார்ந்த சரக்கு போக்குவரத்து வருவாய், 29,690 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இதுகுறித்து, ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:நடப்பு 2013-14ம் நிதியாண்டின், சென்ற ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நான்கு மாதங்களில், இந்திய ரயில்வே, விளைபொருள் சார்ந்த சரக்குகளை கையாண்டதன் மூலம், 29,690.16 கோடி ரூபாய் ஈட்டியுள்ளது.
விளைபொருட்கள்:இது, சென்ற நிதியாண்டின், இதே காலத்தில், 27,515.90 கோடி ரூபாயாக குறைந்து இருந்தது. ஆக, நடப்பு நிதியாண்டின், முதல் நான்கு மாதங்களில், விளைபொருள் சார்ந்த சரக்கு போக்குவரத்து மூலம், இந்திய ரயில்வே ஈட்டிய வருவாய், சென்ற நிதியாண்டின், இதே காலத்தில் ஈட்டியதை விட, 7.90 சதவீதம் அதிகரித்துள்ளது.மதிப்பீட்டு காலத்தில், இந்திய ரயில்வே, 34.30 கோடி டன் என்ற அளவிற்கு, விளைபொருள் போக்குவரத்தை மேற்கொண்டுள்ளது. இது, சென்ற நிதியாண்டின், இதே நான்கு மாத காலத்தில், 32.70 கோடி டன் என்ற அளவிற்கு குறைந்து காணப்பட்டது. ஆக, ரயில்வே துறை, அளவின் அடிப்படையில் கையாண்ட விளைபொருள் போக்குவரத்து, நடப்பு நிதியாண்டின், முதல் நான்கு மாதங்களில்,4.89 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
சென்ற ஜூலையில், விளைபொருள் சரக்கு போக்குவரத்து மூலம், இந்திய ரயில்வே, 6,895 கோடி ரூபாய் ஈட்டியது. இதில், பெரும்பான்மை பங்களிப்பை, நிலக்கரி வழங்கியுள்ளது.மதிப்பீட்டு மாதத்தில், இந்திய ரயில்வே, 4.23 கோடி டன் நிலக்கரியை கையாண்டதன் மூலம், 3,023.64 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது.இந்த பட்டியலில், இரண்டாவது இடத்தில் இரும்புத் தாது உள்ளது. உள்நாடு மற்றும் அயல்நாடுகளில் உள்ள உருக்காலைகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கும் தேவையான, 99.70 லட்சம் டன் இரும்புத் தாதுவை கையாண்டதன் வாயிலாக, இந்திய ரயில்வே,626 கோடி ரூபாய் ஈட்டியுள்ளது.
சிமென்ட்:இதே போன்று, 80 லட்சம் டன் சிமென்ட்டை, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு சென்ற வகையில், இந்திய ரயில்வேக்கு, 564.47 கோடி ரூபாய் கிடைத்து உள்ளது.உணவு தானியங்களை பொறுத்த வரையில், ரயில்வே துறை, 447.44 கோடி ரூபாய் மதிப்புள்ள, 43.40 லட்சம் டன் உணவு தானியங் களை கையாண்டுள்ளது.சென்ற ஜூலை மாதம், இந்திய ரயில்வே, 38.10 லட்சம் டன் பெட்ரோலியம் மற்றும் மசகு எண்ணெய் போக்குவரத்தை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம், 447.44 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
இதே காலத்தில், 31 லட்சம் டன் மென்னிரும்பு மற்றும் முழுமையான உருக்கு பொருட்களை, நாட்டின் பல்வேறு உருக்காலைகளுக்கு கொண்டு சென்ற வகையில், ரயில்வேக்கு, 413.24 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.மதிப்பீட்டு காலத்தில், 41 லட்சம் டன் உரங்களை கையாண்ட வகையில், இந்திய ரயில்வே, 369.53 கோடி ரூபாய் ஈட்டியுள்ளது.
இரும்பு தாது:இதே காலத்தில், உருக்கு ஆலைகளுக்கு, இரும்புத் தாது தவிர்த்து, 14 லட்சம் டன் அளவிலான, இதர மூலப் பொருட்களை கொண்டு சென்ற வகையில், 112.12 கோடி ரூபாய் ஈட்டப்பட்டுள்ளது.மேலும், 36.60 லட்சம் டன் அளவிலான சரக்கு பெட்டக சேவை மூலம், 373.29 கோடி ரூபாய் வருவாய் கிடைத்து உள்ளது. இத்துடன், 55.30 லட்சம் டன் இதர சரக்குகளை கையாண்ட வகையில், இந்திய ரயில்வே, 425.24 கோடி ரூபாயை ஈட்டிஉள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|