பதிவு செய்த நாள்
24 ஆக2013
00:54
புதுடில்லி:உள்நாட்டில் கச்சா எண்ணெய் உற்பத்தி குறைந்ததால், சென்ற ஜூலை மாதத்தில், இதன் இறக்குமதி, 1.59 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.இது, கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில், 1.46 கோடி டன் என்ற அளவில் இருந்தது என, மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிவாயு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.நடப்பு கணக்கு பற்றாக்குறை:சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரங்களால், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, வரலாறு காணாத வகையில் சரிவடைந்து வருகிறது.
இந்நிலையில், கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரித்து வருவது, நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையை, மேலும் அதிகரிக்கச் செய்வதுடன், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும் என, ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.உலக அளவில், பெட்ரோலியப் பொருட்கள் பயன்பாட்டில், இந்தியா மிகப் பெரிய நாடாக உள்ளது. நாட்டின் மொத்த கச்சா எண்ணெய் தேவையில், 75 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகிறது. அன்னிய செலாவணி :ரூபாயின் வெளிமதிப்பு சரிவடைந்துள்ள நிலையில், இதன் இறக்குமதி அதிகரிப்பால், அதிக அளவில், அன்னியச் செலாவணி வெளியேறுகிறது.
கடந்த ஜூலை மாதத்தில், இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள், ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயை, 104.86 டாலர் என்ற விலையில் இறக்குமதி செய்துள்ளன.கடந்த ஜூலை மாதத்தில், உள்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட கச்சா எண்ணெய் உற்பத்தி, 31.79 லட்சம் டன்னாக சரிவடைந்து உள்ளது. இது, கடந்த ஆண்டு, ஜூலை மாதத்தின் உற்பத்தியை (32.55 லட்சம் டன்)விட, 2.3 சதவீதம் குறைவாகும்.ஆயில் இந்தியா மற்றும் ஒ.என்.ஜி.சி., ஆகிய நிறுவனங்களின் எண்ணெய் வயல்களில் உற்பத்தி குறைந்ததே, ஒட்டு மொத்த அளவில், சென்ற ஜூலையில், கச்சா எண்ணெய் உற்பத்தி குறைவிற்கு காரணம்.
அதே சமயம், உள்நாட்டில் பெட்ரோலியப் பொருட்களுக்கான தேவை உயர்ந்ததை அடுத்து, இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள், சென்ற ஜூலை மாதத்தில் கூடுதலாக, 5.1 சதவீத அளவிற்கு கச்சா எண்ணெயை இறக்குமதி செய்துள்ளன.எண்ணெய் சுத்திகரிப்பு:கணக்கீட்டு மாதத்தில் உள்நாட்டு நிறுவனங்களின் எண்ணெய் சுத்திகரிப்பு 1.82 கோடி டன்னிலிருந்து, 1.91 கோடி டன்னாக உயர்ந்துள்ளது.கடந்த, 2004-05 ஆண்டிலிருந்து, 2013ம் ஆண்டு ஏப்ரல் 1ம்தேதி நிலவரப்படி இந்திய எண்ணெய் நிறுவனங்களின் சுத்திகரிப்பு திறன், 68.87 சதவீதம் வளர்ச்சி கண்டு, 21.50 கோடி டன்னாக உயர்ந்து உள்ளது. இது வரும், 2015 -16 ஆண்டில் 26.50 கோடி டன்னாக வளர்ச்சி காணும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி கூறியதாவது:நாட்டின் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், அரசு பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகிறது. குறிப்பாக புதிய துரப்பண பணிகள் மூலம் எண்ணெய் வளத்தை கண்டறியும் வகையில், திட்டங்கள் முடுக்கி விடப்பட்டுள்ளன.இவ்வாறு, அமைச்சர் தெரிவித்தார்.
நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதி, சென்ற 2012 - 13ம் நிதியாண்டில், நாளொன்றுக்கு, 37.10 லட்சம் பீப்பாய்கள் என்ற அளவில் இருந்தது. இது, நடப்பு, 2013-14ம் நிதிஆண்டில், 0.5 சதவீதம் உயர்ந்து, 37.30 லட்சம் பீப்பாய் (18.60கோடி டன்) என்ற அளவிற்கு இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
எரிவாயு உற்பத்தி:நாட்டின் இயற்கை எரிவாயு உற்பத்தியும் கடந்த இரண்டு ஆண்டுகளாக குறைந்து வருகிறது. சென்ற ஜூலை மாதத்தில், இதன் உற்பத்தி, கடந்த ஆண்டின் இதே மாதத்தை விட, 16 சதவீதம் குறைந்து, 358 கோடி கன மீட்டரில் இருந்து, 300 கோடி கன மீட்டராக சரிவடைந்து உள்ளது.கிருஷ்ணா, கோதாவரி படுகையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின், எரிவாயு வயல்களில் இதன் உற்பத்தி மிகவும் குறைந்ததே இதற்கு முக்கிய காரணம் என, பெட்ரோலிய அமைச்சகத்தின் புள்ளி விவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|