பதிவு செய்த நாள்
26 ஆக2013
05:20
புதுடில்லி:பொருளாதார மந்த நிலையில் நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான முதல் காலாண்டில், உள்நாட்டில் பெட்ரோல் பயன்பாட்டு வளர்ச்சி, 1.6 சதவீதமாக சரிவடைந்து உள்ளது.
உலகளவில் பெட்ரோலியப் பொருட்கள் பயன்பாட்டில் இந்தியா நான்காவது பெரிய நாடாக உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் வரை, நாட்டின் பெட்ரோலியப் பொருட்கள் பயன்பாடு மிகவும் அதிகமாக இருந்தது.
கட்டுப்பாடு:இந்நிலையில், பெட்ரோல் மீதான விலை கட்டுப்பாட்டை மத்திய அரசு நீக்கியது. இதனால், இதன் விலை படிப்படியாக உயர்ந்தது. இதனால், பெட்ரோல் பயன்பாடு சரிவடைந்து வருகிறது.
இது தவிர, நாட்டின் பொருளாதார வளர்ச்சி சுணக்கம் கண்டுள்ளதாலும், இதற்கான தேவை குறைந்து வருவதாகப் பெட்ரோலிய பொருட்கள் குறித்து திட்டமிடல் மற்றும் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
கடந்த 2011 -12ம் நிதியாண்டில் பெட்ரோல் பயன்பாட்டு வளர்ச்சி, 5 சதவீதமாக இருந்தது. இது சென்ற, 2012 - 13 நிதியாண்டில் 4.9 சதவீதமாக சரிவடைந்தது. இதன் பயன்பாடு தற்போது மேலும் வீழச்சி கண்டு, 1.6 சதவீதமாக குறைந்துள்ளது என ஆய்வில், தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான எரிபொருள்:பெட்ரோல் நுகர்வு மட்டும் இன்றி, விமான எரிபொருள் பயன்பாடும் குறைந்துள்ளது. அதே சமயம், டீசல் பயன்பாட்டு வளர்ச்சி கடந்த நிதியாண்டில் 6.7 சதவீதம் என்ற அளவில் உயர்ந்திருந்தது.இதற்கு டீசல் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பும், தொழில் துறைகளில் இதன் பயன்பாடு அதிகரித்ததும், மின் பற்றாக்குறையால் நாடு தழுவிய அளவில் டீசல் ஜெனரேட்டர்கள் உபயோகம் பன்மடங்கு உயர்ந்ததும் தான் காரணம் என, ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள பின்னடைவும், ஒட்டு மொத்த அளவில் பெட்ரோலியப் பொருட்கள் நுகர்வில் அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.பொருளாதார வளர்ச்சி:நடப்பு 2013 - 14ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, 5.6 சதவீதமாக குறையும் என, சர்வதேச நிதியும், சென்ற ஜூலையில் மறுமதிப்பீடு செய்து உள்ளது. இதன் முந்தைய மதிப்பீட்டில், இது 5.8 சதவீதமாக இருக்கும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ரிசர்வ் வங்கியும், நடப்பு நிதியாண்டிற்கான நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த அதன் மறுமதிப்பீட்டை, 5.6 சதவீதத்திலிருந்து, 5.5 சதவீதமாக குறைந்துள்ளது.நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 4.8 சதவீதம் என்ற அளவில் மிகவும் குறைவாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. அவ்வாறு இதன் வளர்ச்சி மேலும் சரிவடையும் நிலையில், அது எரிபொருள் பயன்பாட்டு வளர்ச்சியில் மேலும் தாக்கத்தை ஏற்படுத்தும், என ஆய்வு அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து பொருளாதார ஆய்வாளர் ஒருவர் குறிப்பிடும் போது, ஒட்டு மொத்த அளவில் பெட்ரோலியப் பொருட்களுக்கான தேவை குறைந்தால், அது நாட்டின் கச்சா எண்ணெய்க்கான இறக்குமதி செலவை குறைக்கும். இதனால், அதிகரித்து வரும் நடப்பு கணக்கு பற்றாக்குறை குறைய வாய்ப்பு ஏற்படும் என்றார்.
வருவாய்இந்நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி கண்டு வருவது போன்றவற்றால், உள்நாட்டு எண்ணெய் நிறுவனங்கள் அதிக இடர்பாட்டை சந்தித்து வருகின்றன.இந்த சூழ்நிலையில் பெட்ரோலியப் பொருட்களுக்கான தேவை வளர்ச்சி தொடர்ந்து குறையும் நிலையில், அது இந்நிறுவனங்களின் வருவாய் மற்றும் லாப வளர்ச்சியை மிகவும் பாதிக்கும் என்ற கருத்தும் உள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|