பதிவு செய்த நாள்
02 செப்2013
13:58
ஊட்டி: பெருநகர சந்தைகளின் காய்கறி விலை நிலவரங்களை, குக்கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு, எஸ்.எம்.எஸ்., மூலம் அனுப்பும் திட்டம், விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.
சென்னை, கோவை நகரங்களில், புற மாநகர் காய்கறி சாகுபடியாளர் அபிவிருத்தி திட்டத்தை, தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி, இந்நகர மக்களுக்கு, பிற மாவட்ட காய்கறிகளை நியாயமான விலையில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. கோவை மாநகர மக்களுக்கு, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் விளையும் காய்கறிகளும் அனுப்பி வைக்கப்பட உள்ளன.
அந்தந்த மாவட்டங்களில், விவசாயிகளை உள்ளடக்கிய குழுக்கள் அமைக்கப்பட்டு, அவர்களுக்கு மானிய விலையில் வாகன, சேமிப்பு கிடங்கு வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. தவிர, கோவை, சென்னையில் உள்ள மொத்த காய்கறி வியாபாரிகளே நேரடியாக, கிராமப்புறங்களில் உள்ள காய்கறி சேமிப்பு குடோனில் இருந்து, அன்றைய மார்க்கெட் விலையை கொடுத்து காய்கறி வாங்கி செல்வர்; இதன் மூலம், இடைத் தரகர்களின் இடையூறு இல்லாமல், விவசாயிகள் நேரடியாக பயன் பெற முடியும்.
ஏற்கனவே, மாநில அரசின், மலிவு விலை காய்கறி திட்டத்தின் கீழ், நீலகிரி உட்பட, பிற மாவட்டங்களில் விளையும் காய்கறிகள், சென்னை கோயம்பேடு சந்தைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்நிலையில், இப்புதிய திட்டத்தின் கீழ் தேவைக்கு அதிகமாக காய்கறிகள் வரும் பட்சத்தில், அவற்றை மலிவு விலை காய்கறிகள் திட்டத்திற்கு பயன்படுத்தி கொள்ள ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
நாட்டின் மிகப்பெரிய காய்கறி சந்தைகளான சென்னை கோயம்பேடு, மதுரை, திருச்சி, கோவை, ஐதராபாத், மும்பை, கொச்சின் உட்பட, 13 காய்கறி சந்தைகளில் விற்கப்படும் காய்கறிகளின், அன்றாட விலை நிலவரத்தை, குக்கிராம விவசாயிகளின் மொபைல் போனுக்கு, எஸ்.எம்.எஸ்., மூலம், அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம், "மாநகர சந்தைகளின் காய்கறி விலையை தெரிந்து, அதற்கேற்ப தங்களது விளைப் பொருட்களுக்கு, விவசாயிகளால் விலை நிர்ணயிக்க முடியும்' என, தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|