பதிவு செய்த நாள்
10 செப்2013
01:01
சீனாவில் இருந்து, குறைந்த விலையில், இறக்குமதியாகும் பொம்மைகளால், இத்தொழிலில் உள்ள உள்நாட்டு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என, "அசோசெம்' ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா:உள்நாட்டில், 4,000க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பல்வேறு பொம்மைகள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.பொம்மை தயாரிப்பில் கான்பூர், டில்லி, அலகாபாத், லக்னோ, பாட்னா உள்ளிட்ட நகரங்கள்,முக்கிய மையங்களாக திகழ்கின்றன.
குறிப்பாக, 50 சதவீத பொம்மை தயாரிப்பு நிறுவனங்கள், தேசிய தலைநகர் பிராந்தியத்தில் அமைந்துள்ளன.மேலும், மகாராஷ்டிராவில், 35 சதவீத நிறுவனங்களும், இதர மாநிலங்களில், 15 சதவீத நிறுவனங்களும் உள்ளன.கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக, இரட்டை இலக்க வளர்ச்சி கண்டு வந்த பொம்மை தயாரிப்பு துறை, தற்போது, சீன பொம்மைகளின் வரவால், தள்ளாட்டம் கண்டுள்ளது.40 சதவீத பொம்மை தயாரிப்பு நிறுவனங்கள், மூடுவிழா கண்டுள்ளன. மேலும், 20 சதவீத நிறுவனங்கள், அழியும் தருவாயில் உள்ளன என, ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தை மதிப்பு:சர்வதேச சந்தையில், இந்திய பொம்மை தயாரிப்பு துறையின் பங்களிப்பு, 0.51 சதவீதம் என்ற அளவில் உள்ளது. நடப்பாண்டு மார்ச் மாத நிலவரப்படி, உள்நாட்டில், இத்துறையின் சந்தை மதிப்பு, 8,000 கோடி ரூபாய் என, கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், வரும் 2015ம் ஆண்டிற்குள், இத்துறை, 30 சதவீதம் வளர்ச்சி காணும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.தற்போது, இத்துறையில், அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாராத பிரிவுகளில், 30 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர்.
இது, வரும், 2015ம் ஆண்டில், 50 லட்சமாக அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய பொம்மை சந்தையில், உள்நாட்டு பொம்மை தயாரிப்பு நிறுவனங்களின் பங்களிப்பு, 20 சதவீதமாகவும், வெளிநாட்டு பொம்மை நிறுவனங்களின் பங்களிப்பு, 80 சதவீதமாகவும் உள்ளது.சீனா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளிலிருந்து, மலிவு விலையில், மின்னணு, கட்டுமானம், கல்வி உள்ளிட்ட துறைகள் சார்ந்த விளையாட்டு பொம்மைகள், இறக்குமதியாகின்றன.இதனால், சிறியவர் முதல் பெரியவர் வரை, இறக்குமதி செய்யப்படும் பொம்மைகளையே அதிகளவில் விரும்பி வாங்குகின்றனர்.
இத்தாலி:கடந்த 2001 மற்றும் 2012ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், இந்தியாவின் பொம்மை இறக்குமதி, ஆண்டுக்கு சராசரியாக, 25.21 சதவீதம் என்ற அளவில் அதிகரித்துள்ளது.இதில், சீனா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளின் பங்களிப்பு முறையே, 30 சதவீதம் மற்றும் 38.6 சதவீதம் என்ற அளவில் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து, பொம்மைகள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் பன்ஸ்கூல் (இந்தியா) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜான் பேபி கூறியதாவது:தற்போதைய நிலையில், சீனாவில் பணியாளர்களுக்கான செலவினம் குறிப்பிடத்தக்க அளவிற்கு உயர்ந்து வருகிறது. இதனால், சர்வதேச வாடிக்கையாளர்களின் கவனம், இந்திய பொம்மை தயாரிப்பு நிறுவனங்களின் மீது திரும்பியுள்ளது. இதனை நாம் சாதகமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
நமக்குள்ள ஒரே குறை, போதிய அளவிற்கு உற்பத்தி திறன் இல்லாதது தான். ஆனால், சீனா, ஒரு குறிப்பிட்ட நாட்டின், பல்வேறு வாடிக்கையாளர்களுக்கு தேவையான, தனது அனைத்து தயாரிப்புகளையும் ஒருங்கிணைத்து, ஒரே சரக்கு பெட்டகத்தில் அனுப்பி விடுகிறது. இது நம்மால் முடிவதில்லை. இவ்வாறு ஜான் பேபி கூறினார்.- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|