பதிவு செய்த நாள்
27 செப்2013
01:55
இந்தியாவின் பருத்தி நூலிழை ஏற்றுமதி, நடப்பு 2013–14ம் நிதியாண்டில், இரு மடங்கு அதிகரித்து, 200 கோடி கிலோவாக, புதிய உச்சத்தை எட்டும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. சென்ற 2012–13ம் நிதியாண்டில், இந்தியாவின் பருத்தி நூலிழை ஏற்றுமதி, 97 கோடி கிலோவாக இருந்தது.
வளர்ச்சி:கடந்த 2008–09ம் நிதியாண்டு முதல், நாட்டின் பருத்தி நூலிழை ஏற்றுமதி சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. அந்த நிதியாண்டில், 150 கோடி டாலர் மதிப்பிலான, 55.60 கோடி கிலோ பருத்தி நூலிழை ஏற்றுமதி சய்யப்பட்டது.
இந்த ஏற்றுமதி, அடுத்த 2009–10ம் நிதியாண்டில், 59 கோடி கிலோவாக உயர்ந்தது. கடந்த 2010–11 மற்றும் 2011–12ம் நிதியாண்டுகளில், நாட்டின் பருத்தி நூலிழை ஏற்றுமதி, முறையே, 69.60 கோடி கிலோ மற்றும் 75.20 கோடி கிலோவாக மேலும் உயர்ந்து காணப்பட்டது.டந்த 2012–13ம் நிதியாண்டில், 440 கோடி டாலர் மதிப்பிலான, 97 கோடி கிலோ பருத்தி நூலிழை ஏற்றுமதி செய்யப்பட்டது. நடப்பு நிதியாண்டில், பருத்தி நூலிழை ஏற்றுமதி, அளவு மற்றும் மதிப்பின் அடிப்படையில், இரு மடங்கு அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
நடப்பு 2013–14ம் நிதியாண்டு, ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாதங்களில், அன்னிய வர்த்தக தலைமை இயக்குனரகத்திடம், ஏற்றுமதிக்காக முன்பதிவு செய்யப்பட்ட பருத்தி நூலிழை,, அளவின் அடிப்படையில், கடந்த நிதிஆண்டின் இதே காலத்தை விட, 50 சதவீதம் உயர்ந்து, 39.72 கோடி கிலோவில் இருந்து, 59.30 கோடி கிலோவாக அதிகரித்துள்ளது. பருத்தி நூலிழை ஏற்றுமதி, முந்தைய ஆண்டுகளை விட, நடப்பு நிதியாண்டில் அதிகரித்து வருவதற்கு, சீனாவின ஜவுளிக் கொள்கையில் செய்யப்பட்டுள்ள மாற்றம் தான் முக்கிய காரணம்.
சீனா:சீன அரசிடம், அளவிற்கு அதிகமான பருத்தி கையிருப்பில் உள்ளது. ஆனால், அதனை உள்நாட்டு பயன்பாட்டிற்கு அளிக்காமல் வைத்துள்ளது.மேலும், சீன அரசு, உள்நாட்டில் பருத்தி நூலிழை உற்பத்திக்கு ஊக்கமளிக்காமல், வெளிநாடுகளில் இருந்து நேரடியாக பருத்தி நூலிழை இறக்குமதி செய்வதற்கு ஊக்கம் அளித்து வருகிறது.
அதே சமயம், இந்திய ஜவுளி ஆலைகளுக்கு, பருத்தியை விட, பருத்தி நூலிழைக்கான ஆர்டர் அதிகம் கிடைத்து வருகிறது.கடந்த சில ஆண்டுகளாக, அதிகரித்து வரும் பருத்தி நூலிழை ஏற்றுமதியால், இத்துறை சார்ந்த வர்த்தகர்களின் லாபம் அதிகரித்துள்ளது. இதே காலத்தில், ஜவுளி ஆலைகள், அவற்றின் நூலிழை உற்பத்தி திறனை அதிகரிக்கவும் துணை புரிந்துள்ளது.
மத்திய அரசு, பருத்தியை ஏற்றுமதி செய்வதை விட, அதை நூலிழை போன்ற மதிப்பு கூட்டுப் பொருட்களாக மாற்றி, ஏற்றுமதி செய்வதையே விரும்பு கிறது. இது, உள்நாட்டில், வேலை வாய்ப்பை அதிகரிக்கவும், வருவாயை உயர்த்தவும் உதவும் என்பதுதான் இதற்கு காரணம்.'பருத்தி நூலிழை ஏற்றுமதி, இதே வேகத்தில் நடைபெற்றால், நடப்பு நிதியாண்டில், அதன் ஏற்றுமதி, 200 கோடி கிலோவை எட்டும்' என, பருத்தி ஜவுளி ஏற்றுமதி மேம்பாட்டு குழு (டெக்ஸ்ப்ரோசில்) தலைவர் மாணிக்கம் ராமசாமி தெரிவித்தார்.
சீன அரசு, பருத்தி இறக்கு மதிக்கு, அதன் அளவை பொறுத்து, 1–40 சதவீதம் வரை வரி விதிக்கிறது. இதுவும், அந்நாடு அதிக அளவில் பருத்தி நூலிழையை இறக்குமதி செய்ய துணை புரிகிறது.இந்த சாதகமான சூழலை, இந்தியா பயன்படுத்திக் கொண்டு, அதிக அளவில் பருத்தி நூலிழையை ஏற்றுமதி செய்து வருகிறது.
ஜவுளி ஆலைகள்: இதே நிலை தொடர்ந்தால், நடப்பு நிதியாண்டு, இந்தியாவின் பருத்தி ஏற்றுமதி பூஜ்ஜியமாக இருக்கும். கடந்த நிதியாண்டில், இந்தியா, 95 லட்சம் பருத்தி பொதிகளை (1 பொதி–170 கிலோ) ஏற்றுமதி செய்தது குறிப்பிடத்தக்கது' என, இந்திய பருத்தி கழகம் தெரிவித்துள்ளது.
இந்திய ஜவுளி துறை கூட்டமைப்பின் தலைமை இயக்குனர் டீ.கே.நாயர் கூறுகையில், "பருத்தி நூலிழை ஏற்றுமதி உயர்ந்து வருவதால், உள்நாட்டு ஜவுளி ஆலைகளுக்கு பாதிப்பு ஏதும் இல்லை' என்றார்.பருத்தி நூலிழை ஏற்றுமதி அதிகரித்துள்ளதால், உள்நாட்டில் இத்துறையில் வேலைவாய்ப்பும் உயர்ந்து வருகிறது.
– பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|