பதிவு செய்த நாள்
27 அக்2013
00:32
நாமக்கல்:கடந்த, ஒரு வாரத்தில் மட்டும், முட்டை விலை, 19 காசு வரை உயர்ந்துள்ளது. முட்டை விலை உயர்வால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே சமயம், நுகர்வோர் கவலை அடைந்துஉள்ளனர்.நாமக்கல் மண்டலத்தில் மொத்தம், 800க்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகள் செயல்படுகின்றன. அதன் மூலம் தினமும், மூன்று கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
ஏற்றுமதி:இந்த முட்டைகள், உள்ளூர் தேவைக்கும், பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.அதன்படி, 80 லட்சம் முட்டைகள் கேரள மாநிலத்திற்கும், 80 லட்சம் முட்டைகள் தமிழகத்தின் உள்ளூர் விற்பனைக்கும், 70 லட்சம் முட்டைகள் சத்துணவுத் திட்டத்திற்கும் அனுப்பப்படுகின்றன. மீதமுள்ள, 70 லட்சம் முட்டைகள், குவைத், ஐக்கிய அரபு எமிரேட் நாடுகள், பஹ்ரைன், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஆப்பிரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.அதில், வளைகுடா நாடுகளுக்கு, 40 லட்சம் முட்டைகள், ஆப்பிரிக்க நாடுகளுக்கு, 30 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.புரட்டாசி மாதத்தில், முட்டை விற்பனை வெகுவாக குறைந்தது. அதனால், முட்டை விலை சரிவை கண்டது.ஐப்பசி மாதத்தில், கடந்த ஒரு வாரத்தில், இதன் விலை, 19 காசு வரை உயர்ந்துள்ளது.
உத்தர பிரதேசம்:தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர் சங்கத் தலைவர் நல்லதம்பி கூறியதாவது:தமிழகம் மட்டுமின்றி, வடமாநிலங்களில் குளிர்காலம் துவங்கி உள்ளதால், முட்டைக்கு தேவை அதிகரித்துள்ளது. உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு, நாமக்கல்லில் இருந்து, தற்போது முட்டைகள் அதிக அளவில் அனுப்பி வைக்கப்படுகின்றன.கடந்த ஆண்டைக் காட்டிலும், நாமக்கல் மண்டலத்தில், தினமும், 30 லட்சம் முட்டைகளின் உற்பத்தி குறைந்துள்ளது. தேவை அதிகரிப்பு காரணமாக, முட்டை விலை உயர்ந்து உள்ளது. தற்போது, ஒரு முட்டைக்கான உற்பத்திச் செலவு, 3.30 ரூபாயாக உள்ளது. முட்டை விலை உயர்ந்து உள்ளதால், பண்ணையாளர்களுக்கு பெரிய அளவில் இழப்பு இல்லை. இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|