பதிவு செய்த நாள்
29 அக்2013
14:35
கோவை நகரில் பல்வேறு இடங்களில் சில்லறைக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. பிரபல ஓட்டல்கள், பேக்கரிகளில் சில்லறை கொடுத்தால், 10 சதவீத கமிஷன் தர தயாராக உள்ளனர்.
பணத்தின் விலை வீழ்ச்சி அடைந்ததோ இல்லையோ, சில்லறையின் மதிப்பு உயர்ந்துள்ளது. பல இடங்களில் நிலவும் கடுமையான சில்லறை தட்டுப்பாடு, பொதுமக்களை யோசிக்க வைத்துள்ளது. ஓட்டல்கள், பேக்கரிகள், பஸ்களில் சில்லறை தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. பேக்கரிகளில் டீ விலை ரூ.7, ரூ.8 ஆக உள்ளதால், 10 ரூபாய் கொடுத்தால், மூன்று ரூபாய், இரண்டு ரூபாய் சில்லறை கிடைப்பதில்லை. பதிலாக, சாக்லேட், மிட்டாய் கேண்டி கொடுத்து சமாளிக்கின்றனர். இந்த சாக்லேட்களை வாங்க மறுப்போருக்கு மட்டுமே சில்லறை தருகின்றனர். சாக்லெட்டுகளைக் கொடுப்பதால், சாக்லெட்டின் விற்பனை அதிகரிப்பதோடு, அதில் வரும் லாபமும் சேர்ந்து கிடைக்கிறது. சில்லறைக்குப்பதிலாக கிடைக்கும் சாக்லேட்டுகளும் தரமானவையாக இருப்பதில்லை. இதனால், வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்திக்குள்ளாகி வருகின்றனர்.
பஸ்களில் சில்லறைகள் முற்றிலுமாக கிடைப்பதில்லை. கண்டக்டர்கள் சில்லறை கொடுத்து டிக்கெட் வாங்கச் சொல்லுவதும், "சில்லறை இல்லை' என,கூறுவோருக்கு வசைமொழி பாடுவதும் அதிகரித்து வருகிறது. சில்லறை இல்லாத பயணிகளை பாதி வழியில் இறக்கி விடும் சம்பவங்களும் ஏற்படுவது உண்டு. நெடுந்தூரம் பயணம் செய்யும் பயணிகளிடம், ஏறும்போதே கண்டக்டர்கள் "சில்லறை இருந்தால் ஏறு' எனக்கூறுவதும் சாதாரணமாகி விட்டது. சில்லறை மாற்றுவதற்கென்றே பல இடங்களில், பொதுமக்கள் பொருட்களை வாங்கியோ, டீ குடித்தோ மாற்றிக் கொண்டு பயணத்தை தொடருகின்றனர். ஓட்டல்களில் சாப்பிடுவோருக்கும் இதே கதி தான். ஒரு ரூபாய், 2 , 5 ரூபாய் நாணயங்கள் கிடைப்பதில்லை. இதை சமாளிக்க சாக்லெட்டுகளை கொடுக்கின்றனர். பலர், இந்த சாக்லெட்டுகளையே, "சர்வர் டிப்ஸ்' ஆக அளிக்கின்றனர். இந்த சாக்லெட்டுகள் தொடர்ந்து, சில்லறைக்கு மாற்றுப்பொருளாக மாறி வருகிறது. சில பேக்கரிகள், ஓட்டல்களில் 100 ரூபாய் சில்லறைக்கு ஐந்து முதல் 10 சதவீத கமிஷன் தரப்படும் என போர்டுகளையே எழுதி வைத்துள்ளனர். இங்கு சில பஸ் கண்டக்டர்கள் சில்லறையைக் கொடுத்து, கமிஷன் பெறுவதை காணலாம். வியாபாரிகள் கூறுகையில், "கோவில்களில் எண்ணப்படும் உண்டியல் சில்லறைகளை பல வங்கிகள் கணக்கில் இருப்பில் வைத்துள்ளன. "இந்த சில்லறை நாணயங்களை வணிக நிறுவனங்களுக்கு கொடுத்து உதவினால், சில்லறை தட்டுப்பாடு குறையும். வங்கியின் சுமையும் குறையும். சில்லறை காசுகளை தங்கள் வசம் இருப்பில் வைத்துள்ள வங்கிகள், வங்கிகளின் முன் "சில்லறை கிடைக்கும்' என போர்டுகளை வைத்தால், வணிகர்கள் பயன்பெறுவர்' என்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|