பதிவு செய்த நாள்
12 நவ2013
00:20
புதுடில்லி:நடப்பு 2013–14ம் நிதியாண்டின் ஏப்ரல் முதல், நாட்டின் ஏற்றுமதி தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. இதையடுத்து, சென்ற அக்டோபர் மாதத்தில், நாட்டின் மொத்த ஏற்றுமதி, 2,727 கோடி டாலராக (1,63,620 கோடி ரூபாய்) வளர்ச்சி கண்டுள்ளது.இது, கடந்த நிதியாண்டின் இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை (2,403 கோடி டாலர்) விட, 13.47 சதவீதம் அதிகம் என, மத்திய வர்த்தக செயலர் எஸ்.ஆர்.ராவ் தெரிவித்தார்.
வர்த்தக பற்றாக்குறை:ஏற்றுமதி அதிகரித்துள்ள அதேநேரத்தில், சென்ற அக்டோபரில், நாட்டின் இறக்குமதி, கடந்த ஆண்டின் இதே மாதத்தை விட, 14.5 சதவீதம் சரிவடைந்து, ௪,424 கோடி டாலரிலிருந்து (௨,65,440 கோடி ரூபாய்) 3,782 கோடி டாலராக (2,26,800 கோடி ரூபாய்) குறைந்துள்ளது.இதையடுத்து, சென்ற அக்டோபரில் நாட்டின் வர்த்தக பற்றாக்குறை, 1,055 கோடி டாலராக (63,360 கோடி ரூபாய்) மிகவும் சரிவடைந்துள்ளது.
இது, கடந்தாண்டின் இதே அக்டோபர் மாதத்தில், 2,020 கோடி டாலராக (1,21,200 கோடி ரூபாய்) மிகவும் அதிகரித்து காணப்பட்டது.கணக்கீட்டு மாதத்தில், ஏற்றுமதி அதிகரித்து, இறக்குமதி குறைந்துள்ளதால், நாட்டின் வர்த்தக பற்றாக்குறை குறைந்து உள்ளது.அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில், பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பத் துவங்கிஉள்ளதையடுத்து, அந்நாடுகளுக்கான ஏற்றுமதி, சிறப்பான அளவில் அதிகரித்து வருகிறது.நடப்பு நிதியாண்டில், 32,500 கோடி டாலர் (20 லட்சம் கோடி ரூபாய்) மதிப்பிற்கு, ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலை, தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில், நடப்பு நிதியாண்டிற்கான ஏற்றுமதி இலக்கு எட்டப்படும் என, ராவ் குறிப்பிட்டார்.
இறக்குமதி:நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான ஏழு மாத காலத்தில், நாட்டின் ஒட்டு மொத்த ஏற்றுமதி, கடந்த நிதியாண்டின் இதே காலத்தை விட, 6.32 சதவீதம் வளர்ச்சி கண்டு, 17,938 கோடி டாலராக (10,76,280 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது.அதேசமயம், இதே காலத்தில், நாட்டின் இறக்குமதி, 3.8 சதவீதம் குறைந்து, 27,006 கோடி டாலராக (16,20,360 கோடி ரூபாய்) சரிவடைந்துள்ளது. இதையடுத்து, மதிப்பீட்டு காலத்தில், நாட்டின் வர்த்தக பற்றாக்குறை, 11,230 கோடி டாலரிலிருந்து, 9,068 கோடி டாலராக குறைந்துள்ளது.தங்கம் இறக்குமதி:சென்ற அக்டோபர் மாதத்தில், நாட்டின் தங்கம் இறக்குமதி, மதிப்பின் அடிப்படையில், 130 கோடி டாலராக (7,800 கோடி ரூபாய்) மிகவும் குறைந்துள்ளது.
இது, கடந்தாண்டின் இதே மாதத்தில், 680 கோடி டாலராக (40,800 கோடி ரூபாய்) மிகவும் அதிகரித்திருந்தது. இருப்பினும் கணக்கீட்டுமாதத்தில், கச்சா எண்ணெய் இறக்குமதி, 1.7 சதவீதம் உயர்ந்து, 1,520 கோடி டாலராக இருந்தது.பொறியியல் துறையின் ஏற்றுமதி, 36 சதவீதம் வளர்ச்சி கண்டு, 560 கோடி டாலராக உயர்ந்துள்ளது, என, ராவ் மேலும் தெரிவித்தார்.கடந்த 2012–13ம் நிதிஆண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நடப்பு கணக்கு பற்றாக்குறை, 4.8 சதவீதம் அல்லது 8,800 கோடி டாலராக மிகவும் அதிகரித்திருந்தது.இதை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக, நடப்பு நிதியாண்டில், நடப்பு கணக்கு பற்றாக்குறையை, 3.7 சதவீதம் அல்லது 7,000 கோடி டாலராக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக, மத்திய அரசு, அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை குறைக்கும் வகையில், அவற்றின் மீதான சுங்க வரியை அதிகரித்தது.ஆபரணங்கள்:தங்கம் இறக்குமதி மீதான சுங்க வரி, 10 சதவீதமாகவும், தங்க ஆபரணங்கள் மீதான இறக்குமதி வரி, 15 சதவீதமாகவும் அதிகரிக்கப்பட்டது.இவை தவிர, தங்க நாணயங்கள், பதக்கங்கள் போன்றவற்றின் இறக்குமதிக்கு, ரிசர்வ் வங்கி, தடை விதித்தது.அதேநேரத்தில், இறக்குமதிசெய்யப்படும் மொத்த தங்கத்தில்,20 சதவீத தங்கத்தை ஆபரணங்களாக தயாரித்து, ஏற்றுமதிசெய்ய வேண்டும் என்ற கட்டுப் பாட்டையும் அறிவித்தது.இது போன்ற காரணங்களால்,இறக்குமதி குறைந்துள்ளது. அதேசமயம், ஏற்றுமதி அதிகரித்துவருவதால், அது, நாட்டின் நடப்புகணக்கு பற்றாக்குறையை குறைக்க வழிவகுக்கும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|