பதிவு செய்த நாள்
13 நவ2013
00:57
புதுடில்லி: நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் பாசுமதி அரிசி ஏற்றுமதி, 40 லட்சம் டன்னை தாண்டி, புதிய சாதனை படைக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.நடப்பு 2013–14ம் நிதிஆண்டில், ஏப்., – செப்., வரையிலான முதல்அரையாண்டில், நாட்டின் பாசுமதி அரிசி ஏற்றுமதி, 16 சதவீதம் அதிகரித்து, 20 லட்சம் டன்னை எட்டியுள்ளது. இதன் மதிப்பு, 13,578 கோடி ரூபாயாகும்.
மதிப்பீடு: சென்ற நிதியாண்டின் இதே காலத்தில், 17 லட்சம் டன் பாசுமதி அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டது.அதே சமயம், 2012–13ம் முழு நிதியாண்டில், பாசுமதி அரிசி ஏற்றுமதி, அளவின் அடிப்படையில், 30.46 லட்சம் டன்னாகவும், மதிப்பில், 18,985 கோடி ரூபாயாகவும் உள்ளது.கடந்த 2010–11 மற்றும், 2011–12ம் நிதியாண்டுகளில், பாசுமதி அரிசி ஏற்றுமதி, அளவு மற்றும் மதிப்பின் அடிப்படையில், முறையே, 20 லட்சம் டன் (9,781 கோடி ரூபாய்) மற்றும் 30.14 லட்சம் டன் (15,335 கோடி ரூபாய்) ஆக இருந்தது.
ஆக, கடந்த மூன்று முழு நிதியாண்டுகளை விட, நடப்பு நிதியாண்டில், பாசுமதி அரிசி ஏற்றுமதி இரு மடங்கு அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.இதன் அடிப்படையில், நடப்பு நிதியாண்டின், இரண்டாவது அரையாண்டில், மேலும், 20 லட்சம் டன் பாசுமதி அரிசி ஏற்றுமதியாகும் பட்சத்தில், அது, புதிய சாதனையாக கருதப்படும்.இந்திய பாசுமதி அரிசிக்கு, முக்கிய பாரம்பரிய சந்தையாக, மேற்கு ஆசியா விளங்குகிறது.குறிப்பாக, ஈரான், இந்திய பாசுமதி அரிசியை அதிக அளவில் இறக்குமதி செய்து கொள்வதில், தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
ஈரான் நாடு: நடப்பு நிதியாண்டின், முதல் அரையாண்டில், ஈரான், இந்தியாவில் இருந்து, 6,115 கோடி ரூபாய் மதிப்பிலான, 8.49 லட்சம் டன் பாசுமதி அரிசியை இறக்குமதி செய்துள்ளது.இந்திய பாசுமதி அரிசி இறக்குமதியில், சவுதி அரேபியா, இரண்டாவது இடத்தில் உள்ளது. மதிப்பீட்டு காலத்தில், சவுதி அரேபியா, 2,758 கோடி ரூபாய் மதிப்பிலான, 3.83 லட்சம் டன் பாசுமதி அரிசியை இறக்குமதி செய்துள்ளது.
பாசுமதி அரிசி இறக்குமதியில் மூன்றாவது இடத்தில் ஈராக் உள்ளது, இந்நாடு, இதே காலத்தில், 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான, 1.46 லட்சம் டன் பாசுமதி அரிசியை இறக்குமதி செய்துள்ளது.இந்நிலையில், பாசுமதி அரிசிக்கான உற்பத்திச் செலவு உயர்ந்துள்ளதால், அதன் ஏற்றுமதி பாதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, 1121 நெல் ரகத்தின் விலை, கடந்த ஓராண்டில், இரு மடங்கு உயர்ந்து விட்டது. கடந்த ஆண்டு, ஒருகிலோ நெல்,25–27 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இது, தற்போது, 45–46 ரூபாயாக அதிகரித்துள்ளது.நெல் விலை உயர்வால், பாசுமதி அரிசியின் ஏற்றுமதி விலை, அதிகரித்துள்ளது. இது, போட்டி நாடான பாகிஸ்தானுக்கு சாதகமாக உள்ளது.
ஏற்றுமதி விலை: இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் ஒரு டன் பாசுமதி அரிசி விலை, 1,550 டாலராக உள்ளது. அதேசமயம், பாகிஸ்தான் இதை விட, 200 டாலர் குறைவாக, பாசுமதி அரிசியை ஏற்றுமதி செய்கிறது. மேலும், பாகிஸ்தானிடம், உபரியாக ஏற்றுமதி செய்யக்கூடிய அளவிற்கு, 8 லட்சம் டன் பாசுமதி அரிசி உள்ளது. இதனால், சர்வதேச சந்தையில், இந்திய பாசுமதி அரிசி ஏற்றுமதியாளர்களுக்கு, கடும் போட்டி காத்திருக்கிறது.
இருந்தபோதிலும், இந்திய பாசுமதி அரிசி, மணம், தரம் உள்ளிட்ட அம்சங்களில் சிறந்து விளங்குவதால், சர்வதேச சந்தையில், அதற்கான தேவை குறைய வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|