பதிவு செய்த நாள்
02 டிச2013
14:55
திருப்பதி:திருமலையில், நாணயங்களை நேரடியாக சேகரிக்க, ரிசர்வ் வங்கி, ஒப்புதல் அளித்துள்ளது. திருமலை ஏழுமலையானுக்கு, பக்தர்கள் காணிக்கை செலுத்தும், ரூபாய் நோட்டு, நாணயம், தங்கம், வெள்ளி, விலை உயர்ந்த கற்கள், ஆகியவற்றை, தேவஸ்தானம் தனித்தனியே பிரித்து, வங்கிகளில் சேமிக்கிறது. ரூபாய் நோட்டுகளை, கோவிலுக்குள் உள்ள, "பரக்காமணி' பகுதியில் கணக்கிட்டு, வங்கியில் வரவு வைக்கிறது.
நாணயங்களை பிரித்து, மூட்டைகளாக கட்டி, திருப்பதி தலைமை அலுவலகத்தில் கணக்கிட்டு, மாதமொரு முறை, சுழற்சி முறையில், ஒருபொதுத்துறை தேசிய வங்கிக்கு வழங்குகிறது. தினமும், ஒன்பது லட்சம் முதல், 15 லட்சம் ரூபாய் வரை, சில்லரை நாணயங்கள் கிடைக்கின்றன. சில இடைத்தரகர்கள், தேவஸ்தான ஊழியர்களுடன் இணைந்து, 100 ரூபாய் சில்லரைக்கு, 10 முதல், 20 ரூபாய் வரை, கமிஷன் பெற்று, கள்ள சந்தைக்கு அளிக்கின்றனர். ஒத்துழைக்க மறுத்தால், தேவஸ்தான அதிகாரிகளிடம், புகார் தெரிவிப்பதாக மிரட்டுகின்றனர்.
இதை தவிர்க்க, தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாசராஜு, ரிசர்வ் வங்கி அதிகாரிகளை சந்தித்து, "திருப்பதி உண்டியல் மூலம் கிடைக்கும் நாணயங்களை, நேரடியாக சேகரிக்க வேண்டும்' என, கோரிக்கை விடுத்தார்.அதற்கு, ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. திருப்பதியில் வெகு விரைவில், ரிசர்வ் வங்கி, தனி கவுன்ட்டர் அமைக்க உள்ளது. திருப்பதியில் கிடைக்கும் நாணயங்களை, போக்குவரத்து துறை உட்பட, பல்வேறு அரசு துறைகளுக்கு வழங்க உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|