பதிவு செய்த நாள்
11 டிச2013
00:10
புதுடில்லி: வரும் 2014ம் ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதல் காலாண்டில், இந்தியா, அதிக அளவில் வேலைவாய்ப்புகளை வழங்கும் என, மேன்பவர்குரூப் இந்தியா நிறுவனத்தின் குழும நிர்வாக இயக்குனர் ஏ.ஜி.ராவ் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:வரும், 2014ம் ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில், இந்தியாவில் அதிகளவில் வேலைவாய்ப்புகள் பெருகும். குறிப்பாக, கட்டுமானம், சுரங்கம் மற்றும் சேவை ஆகிய துறைகளில் பெருமளவில் வேலைவாய்ப்புகள் உருவாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
உலகளவில், தைவானை அடுத்து, அதிகளவில் வேலைவாய்ப்பு வழங்குவதில், இந்தியா இரண்டாவது இடத்தை பிடிக்கும். அடுத்த இடங்களை, நியூசிலாந்து, கொலம்பியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் பிடிக்கும்.அதேசமயம், இத்தாலி, அயர்லாந்து, பின்லாந்து, ஸ்பெயின், ஸ்லோவேக்கியா, பெல்ஜியம் ஆகிய நாடுகளில் வேலைவாய்ப்பு மந்தமாகவே இருக்கும். இவ்வாறு ராவ் கூறினார்.
இந்நிலையில், சென்ற நவம்பர் மாதத்தில், இந்தியாவில் வேலைவாய்ப்பு பெற்றோர் எண்ணிக்கை, கடந்தாண்டின் இதே மாதத்தை காட்டிலும், 16 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது என, நாக்ரி டாட் காம் தெரிவித்துள்ளது.குறிப்பாக, தகவல் தொழில் நுட்பம்–மென்பொருள் துறையில், வேலை வாய்ப்பு பெற்றோர் எண்ணிக்கை, 10 சதவீதம் அதிகரித்துள்ளது. வங்கி மற்றும் எண்ணெய் – எரிவாயு துறைகளில் வேலைவாய்ப்பு பெற்றோர் எண்ணிக்கை முறையே, 4 மற்றும் 6 சதவீதம் உயர்ந்துள்ளது.
அதேசமயம், பீ.பி.ஓ மற்றும் மோட்டார் வாகன துறையில், வேலைவாய்ப்பு முறையே, 17 சதவீதம் மற்றும் 9 சதவீதம் சரிவடைந்துள்ளது.பெங்களூரு மற்றும் சென்னையில் வேலைவாய்ப்பு பெற்றோர் எண்ணிக்கை முறையே, 7 மற்றும் 2 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேசமயம், டில்லி–என்.சி.ஆர் மற்றும் மும்பை நகரங்களில் இந்த எண்ணிக்கை, 2 சதவீதம் சரிவடைந்துள்ளது என, நாக்ரி டாட் காம் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|