பதிவு செய்த நாள்
11 டிச2013
00:24
கடந்த கால நெருக்கடிகளில் இருந்து மீண்டெழுந்த, திருப்பூர் பின்னலாடை துறை, தற்போது, மின்வெட்டு வடிவில் மீண்டும் சோதனையை சந்தித்துள்ளது. வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து கிடைக்கும் ஏராளமான 'ஆர்டர்'களை, மின்வெட்டு காரணமாக, வேண்டாம் என மறுக்கும் நிலை, திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது.
பற்றாக்குறை:இத்துடன், ஆள் பற்றாக்குறை காரணமாகவும், இந்நிறுவனங்கள், ஏற்றுமதி வாய்ப்பை இழந்து வருகின்றன.
திருப்பூர் பின்னலாடை சந்தையின் மதிப்பு, 13 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக உள்ளது. இந்திய பின்னலாடை துறையில், திருப்பூர் நகரின் பங்களிப்பு, 60 – 70 சதவீதமாக உள்ளது.5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இருந்தும், தற்போது, 20 ஆயிரத்திற்கும் அதிகமான ஆள் பற்றாக்குறையால் தவிக்கிறது, திருப்பூர் பின்னலாடை துறை.கடந்த 2010ம் ஆண்டு, நொய்யல் ஆற்றில் சாயக் கழிவு நீர் கலப்பது தொடர்பான வழக்கில், திருப்பூர் சாய பட்டறைகளை மூட, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.அது முதல், பருத்தி உற்பத்தி சரிவு, சர்வதேச பொருளாதார நெருக்கடி என, திருப்பூர் பின்னலாடை துறை, அடுத்தடுத்து நெருக்கடிகளை சந்தித்து வந்தது.
சாயப்பட்டறைகள் மீதான தடை விலகிய பின்னர், சுறுசுறுப் படைந்த இத்துறை, கடந்த ஓராண்டாக எழுச்சி கண்டு வருகிறது.நடப்பு நிதியாண்டின், சென்ற ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான, முதல் அரையாண்டில், பின்னலாடை ஏற்றுமதி, 29.7 சதவீதம் வளர்ச்சி கண்டு, 8,647 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, சென்ற நிதியாண்டின், இதே காலத்தில், 6,666 கோடி ரூபாயாக இருந்தது.
சிறந்த தரம்: நடப்பு நிதியாண்டில், ஏற்றுமதி, 17ஆயிரம் கோடி ரூபாயை தாண்டும்' என, திருப்பூர் ஏற்றுமதியாளர்கூட்டமைப்பின் தலைவர் ஏ.சக்திவேல் தெரிவித்தார். இந்திய பின்னலாடை துறையின் வலிமை, துணிகளின் தரம், வடிவம், விலை, குறித்த கால சப்ளை உள்ளிட்டவற்றில் அடங்கியுள்ளது. அதனால், வெளிநாடுகளில் இருந்து 'ஆர்டர்' குவிகிறது.
சீனாவை விட, 5 சதவீதம் குறைந்த விலையில் இந்திய பின்னலாடைகள் கிடைப்பதாலும், அவற்றின் ஏற்றுமதி வாய்ப்பு அதிகரித்துள்ளது என, சக்திவேல் மேலும் கூறினார்.
பாதிப்பு: இத்தகைய சூழலில், தமிழகத்தில், 2,500 மெகாவாட் மின் பற்றாக்குறை காரணமாக, அமல்படுத்தப்பட்டுள்ள மின்வெட்டால், திருப்பூர் பின்னலாடை துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பின்னலாடை நிறுவனங்கள், ஒரு யூனிட் மின்சாரத்திற்கு, 6.50 ரூபாய் செலவிட்டு வந்தன. இது, மின்வெட்டு காரணமாக, ஜெனரேட்டரை இயக்குவதன் மூலம், 18–19 ரூபாயாக உயர்ந்து உள்ளது.இதனால், பின்னலாடை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஜெனரேட்டரை சொந்தமாக அல்லது வாடகைக்கு வாங்க முடியாத பல நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன.
இதுகுறித்து, வார்சா இன்டர் நேஷனல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சண்முகம் கூறியதாவது:திருப்பூர் நிறுவனங்கள், 1,200 மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களில் முதலீடு செய்துள்ளன. ஆனால், பின்னலாடை துறைக்கு, 185 மெகாவாட் மின்சாரம் தான் தேவை.இருந்தபோதிலும், மின்தொகுப்பில் இருந்து வினியோகிக்க, போதுமான இணைப்பு வசதிகள் இல்லாததால், தேவையான மின்சாரத்தை பெற முடியாமல் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆபத்து: மின் வெட்டு தொடர்ந்தால், உற்பத்தி செலவு அதிகரித்து, பின்னலாடைகளின் விலை அதிகரிக்கும். இதனால், இந்திய பின்னலாடை நிறுவனங்களின் ஏற்றுமதி வர்த்தகத்தை, போட்டி நாடுகள் பங்கு போட்டுக் கொள்ளும் ஆபத்து உள்ளது என, இத்துறை சார்ந்தவர்கள் தெரிவித்தனர்.
– பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|