பதிவு செய்த நாள்
20 டிச2013
00:54
கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, நடப்பாண்டு நவம்பர் மாதம் வரையிலுமாக, புதிய பங்கு வெளியீடுகள் வாயிலாக திரட்டப்பட்ட தொகை, 1,601.75 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது என, பிரைம் டேட்டாபேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.நடப்பாண்டில், நாட்டின் பங்கு வர்த்தகம், அதிக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இதனால், மூலதனச் சந்தையிலிருந்து, நிதி திரட்டுவது நிறுவனங்களுக்கு சவால் நிறைந்ததாக உள்ளது.
பங்கு சந்தை: புதிய பங்கு வெளியீடுகளை மேற்கொண்ட பல நிறுவனங்களின் பங்குகள், பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் போது, வெளியீட்டு விலையை விட குறைவாக இருப்பதால், முதலீட்டாளர்கள் புதிய பங்கு வெளியீடுகளில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டாமல் உள்ளனர்.இதன் காரணமாகவே, புதிய பங்கு வெளியீடுகளில், மேற்கொள்ளும முதலீடு சரிவடைந்துள்ளதாக, ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2003ம் ஆண்டில், 12 நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீட்டை மேற்கொண்டு, 1,699.80 கோடி ரூபாயை திரட்டி கொண்டன. இதுவே, கடந்த, 10 ஆண்டுகளில் குறைந்தபட்ச அளவாக கருதப்பட்டது.இந்நிலையில், நடப்பாண்டில், நவம்பர் மாதம் வரையில், மூலதனச் சந்தையிலிருந்து திரட்டப்பட்ட தொகை, 1,601.75 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 10 ஆண்டுகளில், 2010ம் ஆண்டில் தான், மிகவும் அதிகபட்சமாக, 64 நிறுவனங்கள், புதிய பங்கு வெளியீடுகள் வாயிலாக, 37,534.65 கோடி ரூபாயை திரட்டி கொண்டன.2007ம் ஆண்டில், 100 நிறுவனங்கள், புதிய பங்கு வெளியீடுகளை மேற்கொண்டன. என்றாலும், அவ்வாண்டில், திரட்டப்பட்ட தொகை, 34,179.11 கோடி ரூபாயாக இருந்தது.இதுகுறித்து, ரெலிகேர் கேப்பிட்டல் மார்க்கெட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கவுதம் திரிவேதி கூறியதாவது:பங்கு சந்தை நிலவரம் நன்கு இல்லாததால், புதிய வெளியீடுகள் மூலம், மூலதனச் சந்தையிலிருந்து நிதி திரட்டும் போக்கு மிகவும் குறைந்துள்ளது.
சில்லரை முதலீட்டாளர்கள்: குறிப்பாக, சில்லரை முதலீட்டாளர்கள், மூலதனச் சந்தை மற்றும் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வதில் இருந்து விலகியே உள்ளனர். இந்த நிலை உடனடியாக மாறுவதற்கான சுழல் காணப்படவில்லை.இவ்வாறு அவர் தெரிவித்தார்.இது குறித்து, பங்குச் சந்தை ஆய்வாளர் எஸ்.பி.துல்சியான் கூறியதாவது:
புதிய பங்கு வெளியீடுகளில், முதலீடு செய்வதால், முதலீட்டாளர்களுக்கு ஆதாயம் கிடைப்பதில்லை.பங்கு சந்தை மீண்டும் எழுச்சி கண்டு அதிலிருந்து, ஆறு மாதத்திற்கு பின் தான் மூலதனச் சந்தை சூடுபிடிக்கும். 2014ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகே மீண்டும் எழுச்சி காண வாய்ப்புள்ளது.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
முதலீட்டாளர்களின் நலன் கருதி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’ பல்வேறு புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.குறிப்பாக, ஒரு நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீட்டிற்கு, போதிய அளவிற்கு ஆதரவு இல்லாவிடில் அந்நிறுவனம், முதலீட்டாளர்களிடமிருந்து பங்குகளை திரும்ப பெறவேண்டும் என, அறிவித்திருந்தது.
கடந்த மூன்று ஆண்டுகளில், பங்கு வெளியீட்டை மேற்கொண்ட மூன்றில் இரண்டு நிறுவனப் பங்குகளின் விலை,வெளியீட்டுவிலையை விட, பங்குச் சந்தையில் குறைவான விலையில் உள்ளன. இதுவும், முதலீட்டாளர்கள் மத்தியில், அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
அன்னிய நிதி நிறுவனங்கள்: பல முதலீட்டாளர்கள் புதிய நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்வதை தவிர்த்து, ஏற்கனவே, பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு, சிறப்பான செயல்பாட்டை கொண்டுள்ள நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வதையே விரும்புகின்றனர்.
நடப்பாண்டில் இதுவரையிலுமாக உள்நாட்டு நிதி நிறுவனங்கள், நிகர அளவில், 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிற்கு பங்குகளை விற்பனை செய்துள்ளன.அதேசமயம், அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தைகளில், நிகர அளவில், 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிற்கு நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
– பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து –
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|