பதிவு செய்த நாள்
10 ஜன2014
12:25
புதுடில்லி: பொதுத் துறையைச் சேர்ந்த, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐ.ஓ.சி.,) நிறுவனத்தின் பங்கு விற்பனை திட்டம், ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக, மத்திய பெட்ரோலிய அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்தார். நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையிலான, முக்கிய அமைச்சரவை கூட்டம் டில்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஐ.ஓ.சி.யின் பங்கு விற்பனைக்கு, பெட்ரோலிய அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்தது. இதன் காரணமாக, இத்திட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மத்திய அரசு, ஐ.ஓ.சி.,யில் கொண்டுள்ள மொத்த பங்கு மூலதனத்தில், 10 சதவீத பங்குகளை விற்பனை செய்து, 4,500 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டிருந்தது. ஆனால், கடந்த ஆண்டு ஜனவரி மாதம், 18ம் தேதி, ஐ.ஓ.சி., நிறுவன பங்கின் விலை, 375 ரூபாயாக இருந்தது. இது, நேற்றைய நிலவரப்படி, 199 ரூபாய் என்ற அளவில் சரிவடைந்துள்ளது. தற்போது, இந்நிறுவனத்தின் பங்குகளின் சந்தை மதிப்பு, 48 ஆயிரம் கோடி ரூபாய் என்ற அளவில் உள்ளது. என்றாலும், இந்நிறுவனத்தில், ஓ.என்.ஜி.சி., நிறுவனம் கொண்டுள்ள, 7.69 சதவீத பங்கு மூலதனத்தை குறைத்து மதிப்பிட்டால், ஐ.ஓ.சி., நிறுவனத்தின் பங்குகளின் சந்தை மதிப்பு, 30 ஆயிரம் கோடி ரூபாய் என்ற அளவில் தான் உள்ளது.
இந்நிலையில், 10 சதவீத பங்குகளை விற்பனை செய்யும் போது, இதன் பங்குகளின் சந்தை மதிப்பு மேலும் குறைந்து விடும். ஐ.ஓ.சி., நிறுவனம், ஒடிசா மாநிலம் பாரதீப்பில், 1.50 கோடி டன் திறனில், சுத்திகரிப்பு ஆலையை அமைத்து வருகிறது. அந்த முதலீட்டு மதிப்புடன் ஒப்பிடும் போது, நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு குறைவாகவே உள்ளது. இதன் காரணமாகவே, ஐ.ஓ.சி., நிறுவனத்தின் பங்கு விற்பனை திட்டம் ஒத்தி போடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|