பதிவு செய்த நாள்
30 ஏப்2014
23:49
லண்டன்:‘‘ஐரோப்பிய கூட்டமைப்பு, பிரச்னைகளை அரைகுறையாக புரிந்து கொண்டு, தவறான வழிகாட்டுதலின் பேரில், இந்திய மாம்பழங்களின் இறக்குமதிக்கு தடை விதித்துள்ளது’’ என, பிரசல்சை சேர்ந்த ஐரோப்பிய இந்திய வர்த்தக கூட்டமைப்பு (இ.ஐ.சி.சி.,)காட்டமாக தெரிவித்துள்ளது.
பூச்சிக்கொல்லி:இந்தியாவின் அல்போன்சா மாம்பழங்கள் மற்றும் சில காய்கறிகளில், நிர்ணயிக்கப்பட்ட அளவிற்கும் அதிகமாக, பூச்சிக்கொல்லி மருந்து காணப்படுவதால், அவற்றின் இறக்குமதிக்கு, இன்று முதல் தடை விதிக்கப்படுவதாக, ஐரோப்பிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய கூட்டமைப்பின் இந்த நடவடிக்கைக்கு, இ.ஐ.சி.சி.,கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக, இந்த அமைப்பின் தலைமை செயலர் சுனில் பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம் வருமாறு:ஐரோப்பிய நாடுகளின் அரசு உயரதிகாரிகள் இந்திய மாம்பழங்களுக்கு தடை விதிக்கும் முடிவை எடுத்துள்ளனர்.இது, இந்தியாவுடன் தாராள வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்வதற்காக, 28 நாடுகளைக் கொண்ட ஐரோப்பியகூட்டமைப்பு நடத்தி வரும், பேச்சுவார்த்தையை பாதிக்கும்.
ஆனால், தாராள வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக, இந்தியாவுடன் பேரம் பேச, இந்த தடை உத்தரவு உதவும் என, ஐரோப்பிய கூட்டமைப்பு கருதுகிறது. அது தவறு. இது, ஐரோப்பிய நாடுகள் குறித்து,இந்தியாவில் அமைய உள்ள,புதிய அரசின் நிலைப்பாட்டை கடுமையாக்கவே வழிவகுக்கும்.ஐரோப்பிய நாடுகள், பலநுாற்றாண்டுகளாக, இந்திய மாம்பழங்களையும் காய்கறிகளையும் இறக்குமதி செய்து வருகின்றன. இவற்றுக்கு தடை விதித்திருப்பது, ஐரோப்பிய கூட்டமைப்பின் பக்குவமற்ற, மோசமான கொள்கை முடிவுகளை மீண்டும் எடுத்துக் காட்டுவதாக உள்ளது.
மறுபரிசீலனை:இந்தியாவை விட, ஆப்ரிக்கா மற்றும் ஆசியாவை சேர்ந்த சில நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பழங்கள் மற்றும் காய்கறிகளின் தரம் மற்றும் ‘பேக்கிங்’ மோசமாக உள்ளன. அவற்றை தவிர்த்து விட்டு, இந்தியாவை மட்டும் குறிவைத்து எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை, கண்ணியக் குறைவான, நியாயமற்ற அணுகுமுறையாகும்.ஐரோப்பிய கூட்டமைப்பு, இந்திய மாம்பழங்கள் மற்றும் காய்கறிகளின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|