பதிவு செய்த நாள்
02 மே2014
01:43
மும்பை:இந்திய பாசுமதி அரிசி இறக்குமதிக்கு, ஈரான் கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது. இதனால், ஈரானுக்கான இந்தியாவின் பாசுமதி அரிசி ஏற்றுமதி சரிவடைந்துள்ளது.
இந்தியாவின் மொத்த அரிசி ஏற்றுமதி யில், பாசுமதி அரிசியின் பங்களிப்பு, 70 சதவீதமாக உள்ளது. கடந்த, 2013–14ம் நிதியாண்டில், இந்தியா, 28,189 கோடி ரூபாய் மதிப்பிலான, 40 லட்சம் டன் பாசுமதி அரிசியை ஏற்றுமதி செய்து உள்ளது.இதில், ஈரான் நாட்டிற்கு மட்டும், 11,488 கோடி ரூபாய் மதிப்பில், 15 லட்சம் டன் பாசுமதி அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
பங்களிப்பு:இவ்வகையில், சென்ற நிதியாண்டில், இந்தியாவின் பாசுமதி அரிசி ஏற்றுமதி யில், ஈரான், 40 சதவீத பங்களிப்பை கொண்டிருந்தது.ஆனால், நடப்பு 2014–15ம் நிதியாண்டில், இந்த பங்களிப்பு வெகுவாக குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு, இந்திய பாசுமதி அரிசி இறக்குமதிக்கு, ஈரான் விதித்துள்ள பல்வேறு நிபந்தனைகள் தான் காரணம் என,ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, மரபணு மாற்ற தொழில்நுட்பத்தில் இந்திய பாசுமதி அரிசி விளைக்கபடுவதில்லை என்ற சான்றை ஈரான் கோரியுள்ளது.இத்துடன், இந்திய வேளாண் வழிமுறைகளின் சிறப்பு குறித்தும், உணவு பாதுகாப்பு மற்றும் ‘பேக்கேஜிங்’ தொடர்பான ‘ஐ.எஸ்.ஓ 22000’ சான்றுகளையும், பாசுமதி அரிசி ஏற்றுமதியாளர்கள் அளிக்க வேண்டும் என, ஈரான் தெரிவித்துள்ளது.இவற்றுக்கெல்லாம் மேலாக, இந்திய பாசுமதி அரிசியில், நிர்ணயிக்கப்பட்ட ரசாயனக் கலப்பின் அளவையும், 22 சதவீதம் குறைத்து விட்டது. பாசுமதி அரிசி மூட்டை
ஒவ்வொன்றிலும், இந்த விவரங்களுடன் கூடிய அட்டை இணைக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் ஈரான் உத்தரவிட்டுள்ளது.
விழிப்புணர்வு:மேற்கண்ட நிபந்தனைகள், நடப்பாண்டு ஜனவரி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து, ஈரான் நாட்டுக்கான, இந்தியாவின் பாசுமதி அரிசி ஏற்றுமதி சரியத் துவங்கியுள்ளது.கடந்த ஆண்டு டிசம்பரில், இந்தியாவில் இருந்து, 1.70 லட்சம் டன் பாசுமதி அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டது. இது, நடப்பாண்டு ஜனவரியில், 1.30 லட்சம் டன்னாகவும், பிப்ரவரியில், 89,387 டன்னாகவும் குறைந்துள்ளது. இது, மார்ச் மாதம் மேலும் குறைந்து, 55,210 டன்னாக சரிவடைந்துள்ளது.
இதுகுறித்து இந்திய அரிசி ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பின் முன்னாள் தவைலர் விஜய் சேத்தியா கூறியதாவது:பாசுமதி அரிசியில் உள்ள ரசாயனக் கலப்பை குறைப்பது குறித்து, விவசாயிகளிடம் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிறப்பான தரக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு ஏற்றுமதியாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதனிடையே, இந்தியாவில் பாசுமதி அரிசி சாகுபடி செய்யும் முறை, பதப்படுத்தும் வசதிகள் உள்ளிட்டவற்றை நேரில் வந்து ஆய்வு செய்யுமாறு, ஈரான் அரசை, மத்திய வர்த்தக அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
சவுதி அரேபியா:இதுகுறித்து அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஈரான் விதித்துள்ள நிபந்தனைகளின்படி, இந்தியா பாசுமதி அரிசியை ஏற்றுமதி செய்ய தயாராக உள்ளது; ஆனால், பல்வேறு அமைப்புகளிடம் தரச் சான்றுகளை பெற வேண்டி யுள்ளதால், ஏற்றுமதியில் தாமதம் ஏற்பட்டுள்ளது,” என்றார்.ஈரானுக்கு அடுத்தபடியாக, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட், குவைத் உள்ளிட்ட நாடுகளுக்கு, இந்திய பாசுமதி அரிசி அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|