பதிவு செய்த நாள்
13 மே2014
01:39
புதுடில்லி:இந்தியாவில், பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீர் விற்பனை சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது.வரும் 2018ம் ஆண்டில், பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீர் சந்தை மதிப்பு, பன் மடங்கு அதிகரித்து, 16 ஆயிரம் கோடி ரூபாயாக வளர்ச்சி காணும் என, ஆய்வு நிறுவனத்தின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சுற்றுலா பயணிகள்:கடந்த 2013ம் ஆண்டு நிலவரப்படி, உள்நாட்டில், பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான சந்தை மதிப்பு, 6,௦௦௦ கோடி ரூபாயாக இருந்தது.இத்துறை ஒட்டு மொத்த அளவில் ஆண்டுக்கு, 22 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டு வருவதாக, மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, சுத்தமான குடிநீரை அருந்தவேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதைஅடுத்து, பாட்டில் குடிநீருக்கான தனிநபர் நுகர்வு மேம்பட்டு வருகிறது.குறிப்பாக, உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில், பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீரை வாங்கி வருகின்றனர்.
உற்பத்தி:பெரிய நிறுவனங்கள் மட்டுமின்றி, மண்டல அளவில் செயல்பட்டு வரும் சிறிய நிறுவனங்களும், பாட்டில் குடிநீர் உற்பத்தி மற்றும் விற்பனையில் சிறந்து விளங்கி வருகின்றன.உள்நாட்டில், பிஸ்லரி, பெப்சிகோ, கோககோலா, பார்லே, தாரிவால் உள்ளிட்ட பெரிய பிராண்டுகள், இச்சந்தையில், 67 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளன. மீதமுள்ள சந்தை பங்களிப்பை, மண்டல அளவில் செயல்படும் அமைப்பு சாராத சிறிய நிறுவனங்கள் பெற்றுள்ளன.போதுமான அளவிற்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், நகரங்கள் மற்றும் சிறிய நகரங்களில் அமைப்பு சார்ந்த நிறுவனங்களால், பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீர் விற்பனையை மேற்கொள்ள முடியவில்லை.
சுபகாரியங்கள்:இது போன்ற இடங்களில், அமைப்பு சாராத நிறுவனங்கள் அதிக பங்களிப்பை கொண்டுள்ளன.பாதுகாக்கப்பட்ட குடிநீர் விற்பனைக்கு, தேவை அதிகரித்து வருவதால், பல பெரிய நிறுவனங்கள், சிறிய பாக்கெட்டுகளில் தண்ணீரை விற்பனை செய்து வருகின்றன.தனிநபர்கள் மட்டுமின்றி, திருமண நிகழ்ச்சிகள், சுபகாரியங்கள், சமூக மற்றும் நிறுவனங்களின் முக்கிய நிகழ்ச்சிகளிலும், பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீர் வினியோகம் அதிகரித்து வருவதாக ஆய்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|