பதிவு செய்த நாள்
25 மே2014
01:16
புதுடில்லி:மலிவு விலையில் இறக்குமதியாகும் சூரிய மின் கலங்கள் இறக்குமதிக்கு, மத்திய வர்த்தக அமைச்சகம், பொருள் குவிப்பு வரி விதித்துள்ளது. மத்திய அரசு, இது குறித்த அரசாணையை வெளியிட்ட உடன், புதிய வரி விகிதம் அமலுக்கு வரும்.மலிவு விலையில் இறக்குமதியாகும் பொருட்களால்,உள்நாட்டு நிறுவனங்கள் பாதிக்கப்படுவதை தடுக்க, பொருள் குவிப்பு வரி விதிக்கப்படுகிறது.
மலிவு விலை:அமெரிக்கா, சீனா, மலேசியா, தைவான் ஆகிய நாடுகள், சூரிய ஒளியில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மின்கலங்கள், மின் தகடுகள் உள்ளிட்டவற்றை மலிவு விலையில், இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்து வருகின்றன.
இந்தியாவில், 70 சதவீதத்திற்கும் அதிகமான சூரிய மின்சக்தி திட்டங்களில், இறக்குமதி செய்யப்பட்ட, குறிப்பாக, சீனாவின் மலிவு விலை சாதனங்கள் தான் பொருத்தப்பட்டு உள்ளன.இதனால், சூரிய மின் உற்பத்தி சார்ந்த சாதனங்களை தயாரித்து வரும் உள்நாட்டு நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவின், சூரிய சக்தி வாயிலான மின் உற்பத்தி திறன், தற்போது, 1,700 மெகாவாட் என்ற அளவிற்கு உள்ளது. இதை, வரும், 2022ம் ஆண்டு, 20 ஆயிரம் மெகாவாட் ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
கடும் போட்டி:அண்மையில்,தேசிய சூரிய சக்தி திட்டத்தின் கீழ், 375 மெகாவாட் உட்பட, 4,000 மெகாவாட் சூரிய மின்உற்பத்திக்கான ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.இது போன்ற திட்டங்கள்,சூரிய மின் சாதன தயாரிப்பு நிறுவனங்களுக்கு வளமான வர்த்தக வாய்ப்பை வழங்கி வருகின்றன.ஆனால், சர்வதேச நாடுகளின் போட்டியால், அத்தகைய வாய்ப்பை, முழுமையாக பயன்படுத்திக் கொள்ள முடியாமல், உள்நாட்டு நிறுவனங்கள் தவிக்கின்றன.
இதையடுத்து, சூரிய மின்சக்தி சாதனங்களின் இறக்குமதிக்கு, பொருள் குவிப்பு வரி விதிக்க வேண்டும் என, இந்நிறுவனங்கள், கடந்த 2012ம் ஆண்டு முதல் வலியுறுத்தி வருகின்றன.இவ்விவகாரம் தொடர்பாக, பொருள் குவிப்பு தடுப்பு தலைமை இயக்குனரகம் (டீ.ஜி.ஏ.டீ.,) கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆய்வு செய்து வந்தது. அதில், மலிவான சூரிய மின்கலங்களின் இறக்குமதியால், உள்நாட்டு நிறுவனங்கள் பாதிக்கப்படுவது உறுதியானது.இதைத் தொடர்ந்து, அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும், ஒரு வாட் சூரிய மின்கலத்திற்கு, 48 சென்ட் (100 சென்ட்– 1 டாலர்) பொருள் குவிப்பு வரி விதிக்க வேண்டும் என, மத்திய வர்த்தக அமைச்சகத்திற்கு பரிந்துரைத்துள்ளது.
வித்தியாசம்:அது போன்று, சீனா, மலேசியா, தைவான் நாடுகளின், ஒரு வாட் சூரிய மின்கலத்திற்கு, முறையே, 81 சென்ட், 62 சென்ட், 59 சென்ட் என்ற விகிதத்தில், பொருள் குவிப்பு வரி விதிக்க வேண்டும் என, வலியுறுத் தப்பட்டுள்ளது.புதிய வரி அமலுக்கு வரும்பட்சத்தில், சூரிய மின்கலங்கள், பட்டிகள் உள்ளிட்ட சாதனங்களுக்காக, கூடுதலாக 5 – 110 சதவீதம் வரி செலுத்த நேரிடும்.இதனால், இறக்குமதி பொருட்களுக்கும், உள்நாட்டு தயாரிப்புகளும் இடையிலான விலை வித்தியாசம் குறையும். இதன் மூலம், உள்நாட்டு தயாரிப்புகளுக்கு தேவை பெருகும்.அமெரிக்கா மிரட்டல்:பொருள் குவிப்பு வரி தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டை, கூர்ந்து கவனித்து வருவதாகவும், இது குறித்து, உலக வர்த்தக அமைப்பிடம் முறையிடுவோம் என்றும், அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் குழு தெரிவித்துள்ளது. இதனிடையே, ஏற்கனவே அளித்த புகாரின்பேரில் இந்தியா – அமெரிக்கா இடையிலான சூரிய சக்தி சாதனங்கள் பிரச்னை குறித்து விசாரிக்க, குறைதீர்ப்பு குழு ஒன்றை, உலக வர்த்தக அமைப்பு நியமித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|