பதிவு செய்த நாள்
02 ஜூன்2014
00:21
ஒடிசாவில், சுரங்க உரிமத்தை புதுப்பிக்காமல் பல ஆண்டுகளாக, முறைகேடாக செயல்பட்ட, 26 இரும்பு தாது சுரங்கங்களை மூட, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதில், டாட்டா ஸ்டீல், செயில் உள்ளிட்ட நிறுவனங்களின் சுரங்கங்களும் அடங்கும்.
கர்நாடகா:சுரங்கங்கள் மூடப்பட்டதால், ஒடிசாவின் இரும்புத் தாது உற்பத்தி, நடப்பாண்டு, 3 – 3.5 கோடி டன்னாக குறையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இது, சென்ற ஆண்டு, 7.2 கோடி டன்னாக இருந்தது.ஏற்கனவே, கர்நாடகா, கோவா ஆகிய மாநிலங்களில் முறைகேடாக நடைபெற்ற சுரங்கங்கள் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஒடிசாவின் சுரங்க நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதால்,உள்நாட்டில், இரும்புத் தாது உற்பத்தி குறிப்பிடத்தக்க அளவிற்கு குறைந்துள்ளது. இதன் காரணமாக, இரும்பு தாது விலை, கிடு கிடுவென உயர்ந்து வருகிறது. ஏற்கனவே, கடந்த இரு வாரங்களில், இரும்பு தாது உருண்டை களின் விலை, 10 – 12 சதவீதம் உயர்ந்து, ஒரு டன், 6,500லிருந்து, 7,200 ரூபாயாக அதிகரித்துள்ளது. வரும் நாட்களில், டன்னுக்கு, மேலும் 500 ரூபாய் உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டில், இரும்பு தாது உருண்டைகளின் விலை, மேலும் உயர்ந்தால், உருக்கு மற்றும் மென்னிரும்பு உற்பத்தி நிறுவனங்கள், இறக்குமதியை நாட வாய்ப்புள்ளது. குறிப்பாக, டாட்டா ஸ்டீல், பூஷன் ஸ்டீல் நிறுவனங்கள், இரும்பு தாது இறக்குமதியை மேற்கொள்ளும் என, இத்துறை சார்ந்தவர்கள் தெரிவித்தனர்.ஒடிசாவில் சுரங்கங்கள் மூடப்பட்டதால், சந்தையில், 4 கோடி டன் இரும்புத் தாது குறையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
இதனால், பல சுரங்க நிறுவனங்கள், விலை மேலும் உயரும் என்ற எதிர்பார்ப்பில், இரும்புத் தாதுவை சந்தைக்கு அனுப்பாமல், நிறுத்தி வைத்துள்ளன. இத்தகைய சூழலில், பல உருக்கு நிறுவனங்கள் முன்னெச்சரிக்கையாக, வெளிநாட்டு நிறுவனங்களிடம், இரும்புத் தாது இறக்குமதி குறித்த பேச்சுவார்த்தையை துவக்கியுள்ளன.
உருக்கு:தற்போது, உள்நாட்டைவிட,வெளிநாட்டு இரும்புத்தாது உருண்டை விலை,குறைவாக உள்ளது.உள்நாட்டில்,63 சதவீத எப்.இ., ரக இரும்பு தாது உருண்டை,ஒரு டன், 7,200 ரூபாயாக உள்ளது.இதே ரகம்,வெளிநாட்டில், 7,020 ரூபாய்க்கு(120 டாலர்) கிடைக்கிறது.எனவே, இரும்புத் தாது விலை மேலும் உயரும்பட்சத்தில்,உருக்கு நிறுவனங்கள், இறக்குமதியை நாடுவதை தவிர, வேறு வழியில்லை என, இத்துறை சார்ந்தவர்கள் தெரிவித்தனர்.
புதிய சாதனை:கடந்த 2012–13ம் நிதிஆண்டில்,உருக்கு நிறுவனங்கள், சாதனை அளவாக, 30.50 லட்சம் டன் இரும்புத் தாதுவை இறக்குமதி செய்தன.சென்ற, 2013–14ம் நிதிஆண்டில், உள்நாட்டில், குறைந்த விலையில், தாராள மாக இரும்புத் தாது கிடைத்த தால், அதன் இறக்குமதி, 5 லட்சம் டன்னாக வீழ்ச்சி கண்டது.– பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|