பதிவு செய்த நாள்
29 ஜூன்2014
00:50
புதுடில்லி:ரிலையன்ஸ் குழுமத்தை சேர்ந்த ஆர்ஜியோ நிறுவனத்தின், குரல் வழி சேவைக்கான அகண்ட அலைவரிசை உரிமத்தை திரும்ப பெற வேண்டும் என, தலைமை கணக்கு தணிக்கை அலுவலகம் (சி.ஏ.ஜி.,), தொலை தொடர்பு துறையிடம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, தொலைத் தொடர்பு துறை அளித்த விளக்கத்தை, சி.ஏ.ஜி., நிராகரித்துஉள்ளது.
ஆதாயம்:கடந்த, 2012 – 14ம் ஆண்டுகளுக்கு இடையே நடைபெற்ற, ‘ஸ்பெக்ட்ரம்’ ஏலங்களில், தொலை தொடர்பு நிறுவனங்கள் செலுத்திய தொகையின் அடிப்படையில் கணக்கிட்டால், ஆர்ஜியோ நிறுவனத்திற்கு, 22,842 கோடி ரூபாய் அளவிற்கு தேவையற்ற ஆதாயம் கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது என, சி.ஏ.ஜி., தெரிவித்துள்ளது.
இதற்கு, தொலைத் தொடர்பு துறையின் கொள்கை அறிவிப்பு தான் காரணம். 2010ம் ஆண்டில் நடைபெற்ற, ‘ஸ்பெக்ட்ரம்’ ஏலத்தில், அகண்ட அலைவரிசைக்கான உரிமத்தில், குரல் வழி சேவைகளையும் வழங்குவதற்கு, தொலை தொடர்பு துறை அனுமதித்திருந்தால், மேலும் பல நிறுவனங்கள் அலைவரிசை ஏலத்தில் பங்கேற்றிருக்கும். அவ்வாறு செய்யாததால், ‘3ஜி ஸ்பெக்ட்ரம்’ உரிமத்திற்கான ஏலம் மூலம், மிக குறைந்த அளவிற்கே அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது.இந்நிலையில், 2013ம் ஆண்டு, தொலை தொடர்பு துறையின், புதிய ஒன்றுபட்ட சேவைக்கு மாற, ஸ்பெக்ட்ரம் உரிமம் இல்லாமல், இணையதள சேவைக்கான உரிமம் மட்டும் வைத்துள்ள நிறுவனங்களுக்கு, நுழைவு கட்டணமாக, 15 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டது.
கட்டணம்:அதே சமயம், இணையதள சேவையுடன், அகண்ட அலைவரிசை உரிமத்தை வைத்துள்ள நிறுவனங்களுக்கு, 1,658 கோடி ரூபாய் மட்டும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இது, இணையதள சேவை உரிமத்தை மட்டும் வைத்திருந்த, இன்போடெல் பிராட்பேண்ட் (ஐ.பீ.,) என்ற நிறுவனத்தை கையகப்படுத்திய, ரிலையன்ஸ் குழுமத்தின் ஆர்ஜியோ நிறுவனத்திற்கு ஆதாயமளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக, சி.ஏ.ஜி., தெரிவித்துள்ளது.
ஏல நடைமுறை முடிந்த சில மணி நேரத்திற்கு பிறகே, இந்த கையகப்படுத்தும் அறிவிப்பு வெளியானது என்றாலும், இதில் ஏதேனும் விதிமீறல் உள்ளதாக, என அரசு ஆராயவோ, எச்சரிக்கை செய்ய வோ இல்லை. இதனால், இப்பிரச்னை குறித்து, அரசு, விசாரணை மேற்கொள்ள வேண்டும். விதிகள் மீறப்பட்டிருந்தால், பிராட்பேண்ட் ஸ்பெக்ட்ரம்' உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என, சி.ஏ.ஜி., அறிக்கையில் தெரிவித்துள்ளது.இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள தொலைத் தொடர்பு துறை, அரசின் கொள்கை முடிவுகளில், சி.ஏ.ஜி., தலையிடக்கூடாது என்றும், அரசுக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் இழப்பு, ஆதாரமற்ற, அனுமானமான மதிப்பீடு எனவும், சி.ஏ.ஜி.,க்கு பதில் அளித்துள்ளது.
இன்போடெல் பிராட்பேண்ட்:முகேஷ் அம்பானியின் ரிைலயன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தை சேர்ந்த ஆர்ஜியோ நிறுவனம், நாடு முழுவதும் மொபைல் போன், பிராட்பேண்ட் உள்ளிட்ட சேவைகளை துவக்க உள்ளது. இதற்காக, இந்நிறுவனம் 13 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. கடந்த, 2010ம் ஆண்டு, ஜூன் 11ம் தேதி, இணையதள சேவை வழங்கும் இன்போடெல் பிராட்பேண்ட் நிறுவனத்தை, 4,800 கோடி ரூபாய்க்கு ரிலையன்ஸ் கையகப்படுத்தியது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|