பதிவு செய்த நாள்
20 ஜூலை2014
00:43
புதுடில்லி:நடப்பு 2014–15ம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், நாட்டின் மறைமுக வரி வசூல், 4.6 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1.31 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது.இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில், 1.08 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது என, நிதி அமைச்சகத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.கலால் வரி, சுங்கவரி, சேவை வரி ஆகியவை மறைமுக வரியின் கீழ் இடம்பெறுகிறது.
பின்னடைவு:தயாரிப்பு துறையின் சுணக்க நிலையால், மதிப்பீட்டு காலாண்டில், கலால் வரி வசூல், 0.2 சதவீதம் பின்னடைவை கண்டு, 35,159 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது.இதே போன்று, சுங்க வரி வசூலும், 3.1 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 39,549 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில், 40,796 கோடி ரூபாயாக அதிகரித்து காணப்பட்டது.மதிப்பீட்டு காலாண்டில், சேவை வரி வசூல், 19.1 சதவீதம் வளர்ச்சி கண்டு, 38,862 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது. மத்திய அரசு, சேவை வரி வசூலை அதிகரிக்கும் வகையில், வரிவிதிப்பு எதிர்மறை பட்டியல் திட்டத்தை அறிமுகம் செய்தது.
இதன்படி, இப்பட்டியலில் அடங்கியுள்ளவை தவிர்த்து, இதர சேவைகள் அனைத்திற்கும் வரி விதிக்கப்படுகிறது. இதன் காரணமாகவே சேவை வரி வசூல் சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டுள்ளது.சென்ற ஜூன் மாதத்தில், மறைமுக வரி வசூல், 13.5 சதவீதம் வளர்ச்சி கண்டு, 44,356 கோடியாக அதிகரித்துள்ளது.
இலக்கு:இதில், கலால் வரி வசூல், 8.1 சதவீதம் உயர்ந்து, 14,666 கோடியாகவும், சுங்க வரி வசூல், 6 சதவீதம் வளர்ச்சி கண்டு, 14,308 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளன.சென்ற ஜூன் மாதத்தில், சேவை வரி வசூல், 27.9 சதவீதம் உயர்ந்து, 15,382 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது.இது, கடந்த நிதியாண்டின் இதே மாதத்தில், 12,025 கோடி ரூபாயாக இருந்தது.நடப்பு நிதியாண்டில், மறைமுக வரிகள் வாயிலாக, 6.24 லட்சம் கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என, அந்த அதிகாரி மேலும் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|