பதிவு செய்த நாள்
28 ஆக2014
10:56
வாடிக்கையாளரை கவரும் வகையில், நிதி நிறுவனங்கள், கார் தயாரிப்பு நிறுவனங்கள், சொகுசு கார் வாங்க, எளிய கடன் வசதி; தள்ளுபடி விலை போன்ற சலுகைகளை வாரி வழங்குகின்றன. இதனால், ஏராளமானோர், தாங்கள் விரும்பிய சொகுசு கார்களை, அதிக விலை கொடுத்து வாங்கி வருகின்றனர். சொகுசு கார்களில், சிறிய பழுது ஏற்பட்டால் கூட, அதற்காக உள்ள பிரத்யேக பழுது பார்க்கும் மையங்களில் மட்டும் தான், பழுது சரி செய்ய வேண்டியுள்ளது. இதற்கு, பெரும் தொகை செலவிட வேண்டியுள்ளது. எனவே, சொகுசு கார்களை பராமரிக்க, இன்சூரன்ஸ் செய்வது அவசியமாகி வருகிறது. காரில் பழுது ஏற்பட்டால், அதன் செலவை, இன்சூரன்ஸ் மூலம், சுலபமாக எதிர் கொள்ள முடியும். மேலும், கார் விபத்தில் சிக்குண்டால், பயணம் செய்தவர்களுக்கும், எதிரே வந்தவர்களுக்கும், இழப்பீடு கோர முடியும்.
இதுகுறித்து, டாடா ஏ.ஐ.ஜி., பொது காப்பீட்டு வாடிக்கையாளர் துணை தலைவர், ரமேஷ் ரமணி கூறியதாவது: சொகுசு கார், உதிரி பாகங்கள் விலை அதிகமாக இருப்பதால், அவை தேய்மானம் ஏற்படும் போது, அதிக செலவிட வேண்டியுள்ளது. எனவே, அதை சமாளிக்க, இன்சூரன்ஸ் செய்ய வேண்டும். மழை, வெள்ளத்தின் போது, சொகுசு கார் இன்ஜின் பழுது ஏற்பட்டு, அதை சரி செய்ய அல்லது மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டால், காரின் மொத்த விலையில், 30 – 40 சதவீத தொகை செலவழிக்க வேண்டும். இன்சூரன்ஸ் செய்வதன் மூலம், இந்த செலவு மிச்சம். இவ்வாறு, அவர் கூறினார்.
தற்போது, காப்பீட்டு நிறுவனங்கள் அதிகளவில் உள்ளதால், அவை வாடிக்கையாளரை கவரும் வகையில், பல சலுகைகள் வழங்கி வருகின்றன. இதனால், ஆண்டு இன்சூரன்ஸ் பிரீமியம் தொகையும் நிறுவனத்திற்கு, நிறுவனம் மாறுபடுகிறது. அதன்படி,
* 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, சொகுசு கார்களுக்கு, ஆண்டுக்கு, 60 ஆயிரம் ரூபாய் முதல் 1.30 லட்சம் ரூபாய் வரை, இன்சூரன்ஸ் பிரீமியம் வசூலிக்கப்படுகிறது.
* 50 லட்சம் ரூபாய் காருக்கு, 90 ஆயிரம் ரூபாய் – 2.20 லட்சம் ரூபாய்; 1 கோடி ரூபாய் கார், 1.75 லட்சம் ரூபாய் – 4.30 லட்சம் ரூபாய் என, பிரீமியம் வசூலிக்கப்படுகிறது.
* வாடகை சொகுசு கார்களுக்கு, மேற்கண்ட பிரீமியம் தொகையுடன், கூடுதலாக, 20 ஆயிரம் – 30 ஆயிரம் ரூபாய் வசூல் செய்யப்படுகிறது.
* ஆண்டுதோறும், இன்சூரன்ஸ் பிரீமியம் செலுத்தி, விபத்து ஏற்படாமல், இழப்பீடு கோரவில்லை என்றால், அடுத்த பிரீமியம் தொகையில், சலுகை வழங்கப்படுகிறது.
* வெளிநாடுகளில், காரின் மொத்த தொகையில், 10 சதவீதம் இன்சூரன்ஸ் பிரீமியமாக வசூலிக்கப்படுகிறது. இந்தியாவில், 2 – 3 சதவீதம் மட்டுமே பிரீமியம் வசூலிக்கப்படுகிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|