பதிவு செய்த நாள்
15 அக்2014
11:48
புதுடில்லி: நாட்டின் பிரபல நிறுவனங்கள், பங்குச்சந்தையில் முதலீடு திரட்டுவதற்காக, ஏராளமான கிளை நிறுவனங்களை துவக்கி, அதன் மூலம் முதலீட்டாளர்களின் பணத்தை மோசடி செய்து வந்துள்ளன என்பது, டி.எல்.எப்., மோசடி மூலம் அம்பலமாகியுள்ளது.
நாட்டின் மிகப் பெரிய கட்டுமான நிறுவனமான, டி.எல்.எப்.,பின் தலைவர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் சிலருக்கு, மூன்று ஆண்டுகளுக்கு பங்குச்சந்தையில் ஈடுபட, செபி எனப்படும் பங்கு, பரிவர்த்தனை கட்டுப்பாட்டு அமைப்பு தடை விதித்துள்ளது. அதற்கு காரணம், அந்த நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகளின் மனைவியர் பெயரில், கிளை நிறுவனங்கள் துவக்கி, முதலீட்டாளர்களின் பல கோடி ரூபாயை ஏமாற்றியது தான் என்பது தெரிய வந்துள்ளது.இது போல், நாட்டின் பிரமாண்டமான பல நிறுவனங்கள், துணை மற்றும் கிளை நிறுவனங்களை ஏற்படுத்தி, அதன் மூலம் முதலீட்டாளர்களிடம் இருந்து பணத்தை திரட்டி, மோசடி செய்து வந்துள்ளன என்பதும் அம்பலமாகியுள்ளது.
இதில் சில நிறுவனங்கள், வெளிப்படையாக இந்த முறைகேட்டை ஒப்புக் கொண்டுள்ளன; சில, அவ்வாறு எவ்வித முறைகேட்டிலும் ஈடுபடவில்லை என தெரிவித்துள்ளன.டி.எல்.எப்., நிறுவனத்தின் இந்த மோசடியை அம்பலப்படுத்தியது, டில்லி தொழிலதிபர், கே.கே.சின்ஹா என்பவர். இவர், டி.எல்.எப்., நிறுவனத்தின் கிளை நிறுவனம் என அறிவிக்கப்பட்ட சுதிப்தி எஸ்டேட் என்ற நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். அதில் சில பிரச்னைகள் ஏற்பட்டதும், அதன் பங்குதாரர்கள் என முன்னர் அறிவிக்கப்பட்ட, டி.எல்.எப்., நிறுவனத்திடம் பதில் கேட்டுள்ளார்.
அப்போது, அவர் முதலீடு செய்த நிறுவனத்திற்கும் தன் நிறுவனத்திற்கும் தொடர்பு இல்லை என, டி.எல்.எப்., தெரிவித்துள்ளது.இதனால் ஏமாற்றம் அடைந்ததாக கருதிய சின்ஹா, செபியிடம் புகார் கூறினார். அதன் பிறகு, இந்த விவகாரம் டில்லி உயர்நீதிமன்றத்திற்கு சென்றது. அதற்குப் பிறகு, செபி மேற்கொண்ட விரிவான விசாரணைக்குப் பிறகுதான் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இது போல பல இந்திய நிறுவனங்கள், தங்களின் கிளை நிறுவனங்களை அறிவிப்பதும், பிரச்னை ஏற்பட்ட பிறகு, தங்களுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என கூறுவதும் வாடிக்கையாக உள்ளது என, முதலீட்டாளர்கள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|