பதிவு செய்த நாள்
15 அக்2014
23:54
புதுடில்லி :கடந்த செப்டம்பரில், தாவர எண்ணெய் இறக்குமதி, 10.47 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.
இது, கடந்தாண்டின் இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட இறக்குமதியுடன் (8.63 லட்சம் டன்) ஒப்பிடுகையில், 21 சதவீதம் அதிகமாகும் என, எண்ணெய் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு (எஸ்.இ.ஏ.,) தெரிவித்துள்ளது.
பாமாயில்: மலிவு விலை தாவர எண்ணெய் இறக்குமதியை கட்டுப்படுத்தவும், உள்நாட்டில், எண்ணெய் வித்துக்கள் சாகுபடியில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை பாதுகாக்கவும், தாவர எண்ணெய் இறக்குமதி வரியை உயர்த்த வேண்டும் என, இக்கூட்டமைப்பு, மத்திய அரசை கேட்டு கொண்டுள்ளது.
இந்தியாவின் தாவர எண்ணெய் தேவை ஆண்டுக்கு, 1.70–1.80 கோடி டன் என்ற அளவில் உள்ளது. இதில், 60 சதவீதம் இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்து கொள்ளப்படுகிறது. ஒட்டு மொத்த தாவர எண்ணெய் இறக்குமதியில், பாமாயிலின் பங்களிப்பு, 71 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த செப்டம்பரில், மேற்கொள்ளப்பட்ட 10.47 லட்சம் டன் தாவர எண்ணெய் இறக்குமதியில், சமையல் எண்ணெயின் பங்களிப்பு, 10.18 லட்சம் டன்னாகவும், சமையல் சாரா எண்ணெயின் பங்களிப்பு, 28,853 டன்னாகவும் உள்ளன. சமையல் எண்ணெய் பிரிவில், பாமாயிலின் இறக்குமதி, 6,98,471 டன்னாக உயர்ந்துள்ளது. இது, கடந்தாண்டு செப்டம்பரில், 6,44,386 டன்னாக இருந்தது.
சோயா எண்ணெய்: இதே போன்று, சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி, 48,498 டன்னிலிருந்து, 1,32,491 டன்னாக அதிரடியாக உயர்ந்துள்ளது. மேலும், சோயா எண்ணெய் இறக்குமதியும், 1,40,971 டன்னிலிருந்து, 1,61,016 டன்னாக அதிகரித்துள்ளது.கடந்த, 2013–14ம் பருவத்தில், நாட்டின் ஒட்டு மொத்த தாவர எண்ணெய் இறக்குமதி, 9.5 சதவீதம் அதிகரித்து, 1.05 கோடி டன்னை எட்டியுள்ளது என, எஸ்.இ.ஏ., மேலும் தெரிவித்துள்ளது.நம்நாடு, பாமாயிலை அதிகளவில், இந்தோனேஷியா, மலேசியாவிலிருந்தும், சோயா எண்ணெயை, லத்தீன் அமெரிக்காவிலிருந்தும், சூரியகாந்தி எண்ணெயை, உக்ரைன் மற்றும் ரஷ்யாவிலிருந்தும் இறக்குமதி செய்து கொள்கிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|