பதிவு செய்த நாள்
27 அக்2014
03:40
கம்பம்:தொடர் மழையால் திராட்சையில் செவட்டை நோய் தாக்குதல் அதிகரித்து, விலையும் குறைந்துவிட்டதால் கம்பம் விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.
ஆண்டு முழுவதும் திராட்சை சாகுபடியாகும் பகுதி என்ற பெருமையை,தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பெற்றுள்ளது.உலகின் பிற பகுதிகளில் ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே அறுவடை செய்யப்படும் திராட்சை,கம்பம் பள்ளத்தாக்கில் மட்டும் ஆண்டிற்கு மூன்று முறை அறுவடை செய்யப்படுகிறது.இங்குள்ள மண் வளம்,மழை அளவு, சீதோஷ்ண நிலை தான் இதற்கு காரணம். இருந்த போதிலும் திராட்சை விவசாயிகளுக்கு தீராத பிரச்னையாக இருப்பது செவட்டை நோய் தாக்குதல் மட்டுமே.
கூடுதல் மழை,பனி காலங்களில் இந்த நோய் திராட்சையை தாக்கும்.30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்நோயை கட்டுப்படுத்த வழி தெரியாமல் விவசாயிகள் திண்டாடி வருகின்றனர்.பத்து நாட்களுக்கும் மேலாக பெய்து வரும் தொடர் மழையால் காமயகவுண்டன்பட்டி,நாராயணதேவன்பட்டி,சுருளிபட்டி உள்ளிட்ட பகுதிகளில்,5,000 ஏக்கருக்கும் மேல் சாகுபடி செய்யப்பட்டுள்ள திராட்சையில் செவட்டை நோய் தாக்கியுள்ளது.கொடியில் உள்ள பழங்கள் வெடித்தும், பிஞ்சுகள் உதிர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு கிலோ திராட்சை விலையும், 15 ரூபாய்க்கும் கீழ் சென்று விட்டது. இதனால், விவசாயிகள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
திராட்சை விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் இருளாண்டி கூறுகையில், மழை அதிகமாக பெய்ததால் வேர்கள் அதிகமாக தண்ணீரை குடித்து பழங்களில் வெடிப்பு ஏற்படுகிறது. 5,000 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள திராட்சையின் நிலை மோசமாக உள்ளது. அடுத்து வரும் காலமும் மழை மற்றும் பனி காலமாக இருப்பதால் திராட்சை விவசாயிகளின் பாடு திண்டாட்டம் தான், என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|