பதிவு செய்த நாள்
13 நவ2014
00:24
சேலம்: சபரிமலை சீசன் துவங்கும் கார்த்திகை மாதம் பிறக்க, இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தமிழகத்தில் பிராய்லர் கறிக்கோழி விலை திடீரென சரிந்துள்ளது. விற்பனையை அதிகரிக்க, வியாபாரிகள் அதிரடி தள்ளுபடி அறிவிப்புகளை அறிவித்து வருகின்றனர்.
கார்த்திகை மாதம்:தமிழகத்தில், புரட்டாசி மாதம் எதிரொலியாக கடந்த, செப்., 17ம் தேதி, பிராய்லர் கறிக்கோழி உயிருடன் கிலோ, 70 ரூபாய்க்கும், கறி கிலோ, 100 ரூபாய் முதல், 110 ரூபாய் வரை விற்பனையானது.புரட்டாசி முடிந்த நிலையில் அக்., 22ல் தீபாவளி பண்டிகையை ஒட்டி, கறிக்கோழியின் தேவை அதிகரித்ததால், அதன் விலை உயர்ந்தது. சராசரியாக கிலோவுக்கு, 40 ரூபாய் முதல், 50 ரூபாய் வரை உயர்ந்தது.
தீபாவளி பண்டிகையின் போது, உயிருடன் கிலோ, 110 ரூபாய் முதல், 120 ரூபாய் வரையிலும், கறி கிலோ, 150 ரூபாய் முதல், 160 ரூபாய் வரை, விற்பனை செய்யப்பட்டது.தீபாவளி பண்டிகை முடிந்த நிலையில், கறிக்கோழியின் தேவையில் சரிவு ஏற்பட்டதால், அதன் விலை கிலோவுக்கு, 12 ரூபாய் வரை சரிந்தது.
இந்நிலையில், நவ., 17ம் தேதி கார்த்திகை மாதம் பிறக்கும் நிலையில், சபரிமலை சீசன் துவங்குவதால், கறிக்கோழியின் விற்பனையில் சரிவு ஏற்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இந்த சரிவை ஈடுகட்டும் வகையில், தற்போது கறிக்கோழியின் விலையை வியாபாரிகள் குறைத்துள்ளனர்.அதன்படி, கடந்த மாதத்தை ஒப்பிடுகையில் கறிக்கோழி விலை, கிலோவுக்கு, 40 ரூபாய் வரை, சரிவடைந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி உயிருடன் கிலோ, 80 ரூபாய்க்கும், தனிக்கறி கிலோ, 110 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கார்த்திகை மாதம் பிறக்க இன்னும், சில நாட்களே உள்ள நிலையில், பிராய்லர் கறிக்கோழி வரத்து மேலும் அதிகரிக்கும் என்பதால், அதன் விலை மேலும் சரியும் என, வியாபாரிகள் தெரிவித்தனர்.
அதிரடி தள்ளுபடி:கறிக்கோழியின் விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளதால், விற்பனையை அதிகரிக்க, வியாபாரிகள் அதிரடி தள்ளுபடி சலுகைகளை வாரி வழங்க துவங்கி உள்ளனர். அந்த வகையில், ஐந்து கிலோ கறி வாங்கும் பட்சத்தில், அதன் விலை, கிலோ, 110 ரூபாய் எனவும், 10 கிலோ வாங்கும் நிலையில் கறி விலை கிலோ, 100, என, விற்பனை செய்கின்றனர்.இது தவிர, கறி வாங்கினால் முட்டை, மசாலா பொடி இலவசம் என, பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டு அசத்தி வருகின்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|