பதிவு செய்த நாள்
05 டிச2014
01:18
இந்திய துறைமுகங்களின் கையாளும் திறன் மேம்படுத்தப்படுகிறது. சரக்கு கப்பல்களின் காத்திருக்கும் காலத்தை குறைப்பதோடு, இருப்பு சரக்குக்கு மட்டுமே, கட்டணம் வசூலிக்கும் புது முடிவை, மத்திய கப்பல் துறை அமைச்சகம் கொண்டு வருகிறது.
இந்தியாவில், 12 பெரிய துறைமுகங்கள் உள்ளன. தற்போது, துறைமுகங்களுக்கு வரும் சரக்கு கப்பல்கள், உள்ளே வர, அதிகபட்சம், ஒரு வாரம் வரை காத்திருக்கும் சூழல் உள்ளது. உடனுக்குடன் கப்பல்கள் வர முடியாததால், சரக்கு கையாளும் திறன் அதிகம் இருந்தும், பெரிதாக சாதிக்க முடியவில்லை.
பல்வேறு துறைமுகங்களில், கன்டெய்னர் லாரிகள் நீண்ட வரிசையில் காத்திருப்பதும், போக்குவரத்துக்கு பெரும் சிக்கலாகும் சூழலும் இருந்து வருகிறது.இதைக் கருத்தில் கொண்டு, மத்திய கப்பல் துறை அமைச்சகம், புதிய திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த உள்ளது.
இதன்படி,*சரக்கு ஏற்றி வரும் கப்பல்கள், இரண்டு நாட்களுக்கு மேல் காத்திருக்காமல், துறைமுகத்திற்குள் அனுமதித்தல்.*கடந்த காலம் போல், கப்பலின் கொள்ளளவுக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்காமல், இருப்பு சரக்கின் தன்மைக்கேற்ப, கட்டணம் வசூலித்தல்.
*துறைமுகத்தில் நுழைவு, நிறுத்து கட்டணத்தை, துறைமுகத்திற்கு நேரில் வந்து செலுத்தாமல், சுங்கத்துறை கட்டணம் நிர்ணயம் செய்ததும், எங்கிருந்து வேண்டுமானாலும், ‘ஆன் – லைன்’ வழியாக செலுத்தும் வசதி என, முக்கிய மூன்று முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளன.இதை, விரைவில் நடைமுறைப்படுத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, கப்பல் துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது:அரசின் இந்த முயற்சி யால், துறைமுகங்களுக்கு வரும் சரக்கு கப்பல்கள், குறித்த காலத்தில் உள்ளே வந்து சரக்குகளை இறக்கி விட்டு, விரைவாக வெளியேறும். கட்டணத்தை, ஆன் – லைனில் செலுத்துவதால், தேவையின்றி கப்பல் காத்திருக்கும் நிலை குறையும். கப்பல்களின் வரத்து அதிகரித்து, துறைமுகங்களின் கையாளும் திறன் அதிகரிக்கும். துறைமுகத்தின் உள்ளேயும், வெளியேயும், லாரிகளால் ஏற்படும் நெரிசலுக்கும் தீர்வு கிடைக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.
பிரதமர் மோடியின், ‘மேக் இன் இண்டியா’ என்ற திட்டத்தைக் கருத்தில் கொண்டே, இந்த வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. இது, நிச்சயம் வரவேற்பை பெறும். பொருளாதார மேம்பாட்டிற்கும் வழி வகுக்கும் என, வர்த்தக அமைப்புக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.
முடங்கிய சாலை பணிகள்: சென்னையில் சிக்கல் தான்!:
‘மத்திய அரசின் இந்த முயற்சி பயன் அளிக்கும் என்றாலும், சென்னைத் துறைமுகத்தில் சிக்கல் தீராது’ என, வர்த்தகர்கள் கவலை தெரிவித்து உள்ளனர்.தமிழ் வர்த்தக சபைத் தலைவர், சோழநாச்சியார் ராஜசேகர் கூறியதாவது:புதிய வசதிகளால், சரக்குகளை ஏற்றி வரும் வாகனங்களின் போக்குவரத்து அதிகரிக்கும். சென்னை துறைமுகத்திற்கு வந்து செல்ல வசதியாக, போதிய சாலைக் கட்டமைப்பு வசதிகள் இல்லை. இதனால், நிலைமை மோசமாகும்.சென்னை துறைமுகம் – மதுரவாயல் மேம்பால சாலைத் திட்டம், சென்னை – எண்ணுார் துறைமுக இணைப்புச் சாலைத் திட்டப் பணிகளை, விரைந்து செயல்படுத்தினால் தான், தீர்வு கிடைக்கும். மாநில அரசின் தடையால், பணிகள் முடங்கி உள்ளன.
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முதல்வரை சந்தித்து பேசி உள்ளார். சென்னை வெளிவட்ட சாலைப் பணிகளும் அவசியம்.இந்த சாலைப் பணிகள் முடிந்தால் தான், சிக்கல் தீரும்; இல்லாவிட்டால், புதிய முயற்சியின் பயன் முழுமையாக கிடைக்காது.இவ்வாறு, அவர் கூறினார்.
– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|