பதிவு செய்த நாள்
27 டிச2014
08:21
திருப்பூர் : பின்னலாடை துறை வளர்ச்சிக்கான ஆலோசனை வழங்கும், வெற்றிப்பாதையில் திருப்பூர்-3 நிகழ்ச்சி, வேலாயுதசாமி மண்டபத்தில் இன்று காலை 9.30க்கு துவங்குகிறது; மத்திய இணை அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்கின்றனர். எனவே, அனைத்து தொழில் துறையினரும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பின்னலாடை தொழிலை தொடர்ந்து வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்லும் வகையில், தொழில் துறையினர் இணைந்து, 2012 முதல் 'வெற்றிப்பாதையில் திருப்பூர்' நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர். எல்லா வகையிலும், தற்போது பன்னலாடை துறைக்கு சுமூகமான சூழல் நிலவுகிறது.உற்பத்தி செலவினத்தை குறைத்து, சர்வதேச மற்றும் உள்நாட்டு ஆடை சந்தையில் ஏற்பட்டுள்ள போட்டியை எதிர்கொள்வது அவசியம்; ஆடை வர்த்தகம் இலக்கை அடைவதற்கும், புதிய தொழில்நுட்பம், திட்டங்கள் தேவை. அதன் அடிப்படையில், 'வெற்றிப்பாதையில் திருப்பூர்-3' நிகழ்ச்சி, தாராபுரம் ரோட்டில் உள்ள வேலாயுதசாமி மண்டபத்தில் இன்று நடத்தப்படுகிறது.நிப்ட்-டீ கல்லூரியுடன், இந்திய தொழில் கூட்டமைப்பு, ஸ்ரீபுரம் அறக்கட்டளை, தொழில் பாதுகாப்பு குழு இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்துகின்றன.காலை 9:30 மணிக்கு துவங்கும் இந்நிகழ்ச்சியில், செயற்கை இழை ஆடை உற்பத்தி, தண்ணீரின்றி சாயமிடும் தொழில்நுட்பம், 'ஜீரோ டிபெக்ட், ஜீரோ எபெக்ட்', 'மேக் இன் இந்தியா' தலைப்புகளில் கருத்தரங்கு நடக்கிறது.தொடர்ந்து நடக்கும் நிகழ்ச்சியில், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தரைவழி மற்றும் கப்பல் போக்குவரத்து துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மும்பை டெக்ஸ்டைல் கமிட்டி செயலர் நாயக் ஆகி யோர் பேசுகின்றனர். தொழில் துறையினரிடம், கோரிக்கைகளை மனுவாக பெறுகின்றனர்.இந்திய தொழில் கூட்டமைப்பு மாவட்ட கவுன்சில் தலைவர் ராஜா சண்முகம் கூறியதாவது: பின்னலாடை தொழில், இயற்கையாக ஒரு குழுமமாக உருவானது. தனது தனித்துவத்தால், பின்னலாடை நகரம் என்கிற அளவுக்கு புகழ்பெற்றுள்ளது. தொழில் மேலும் வளர்ச்சியடைவதற்கான வழிமுறையை கண்டறிய வேண்டும் என்கிற நோக்கில் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது; மத்திய அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.வழக்கமாக, அமைச்சர்களை தேடிச்சென்று, தொழில் துறையினர் கோரிக்கைகளை அளிக்க வேண்டும். இந்நிகழ்ச்சி அனைவருக்கும் அரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது. எனவே, அனைத்து பின்னலாடை துறையினரும் பங்கேற்க வேண்டும். ஒட்டுமொத்த தொழில் துறைக்கு தேவையான பொதுவான கோரிக்கைகள் தொகுக்கப்பட்டுள்ளன.இருப்பனும், சங்கத்தினர், தங்கள் கோரிக்கைகளை அமைச்சர்களிடம் மனுவாக அளிக்கலாம். பின்னலாடை நிறுவன உரிமையாளர்கள் மட்டுமின்றி, நிர்வாகிகள், மெர்ச்சண்டைசர், புரொடக்ஷன் மேலாளர் போன்ற முக்கிய பணிகளில் உள்ளவர்களும் பங் கேற்று, தொழில் தொடர்ந்து, வெற்றிப்பாதையில் பயணிக்க கரம் கோர்க்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.”தினமலர்' இணைய தளத்தில் நேரடி ஒளிபரப்பு : செய்திகளை, வாசகர்கள் உடனுக்குடன் அறிந்துகொள்ளும் வகையில், 'தினமலர்' நாளிதழ், இணைய தளம் சேவையையும் அளித்து வருகிறது. திருப்பூர் பின்னலாடை தொழில் துறை வளர்ச்சிக்காக, இன்று நடக்கும் 'வெற்றிப்பாதையில் திருப்பூர்' நிகழ்வுகளை, அனைத்து தரப்பனரும் பார்த்து, பயனடைய வேண்டும் என்ற நோக்கத்தில், இணைய தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நிகழ்ச்சி காலை 9:30 மணிக்கு துவங்கும்; மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய தரைவழி மற்றும் கப்பல் போக்குவரத்துதுறை இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் உள்ளிட்டோர் பேசுகின்றனர். இந்நிகழ்ச்சி, www.dinamalar.com என்ற இணைய தளத்தில், நேரடி ஒளிபரப்பாகும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|