பதிவு செய்த நாள்
29 அக்2015
14:07
பதுக்கல் மீதான நடவடிக்கையை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளதால், ஒரு வாரத்தில், துவரம் பருப்பு விலை, கிலோவுக்கு, 30 ரூபாய் வரை குறைந்துள்ளது. மற்ற பருப்பு வகைகளின் விலையும் குறைந்து வருகிறது.வட மாநிலங்களில் விளைச்சல் குறைவால், தமிழகத்திற்கு பருப்பு வரத்து குறைந்தது; பற்றாக்குறையால் விலை உயர்ந்தது. பெரு முதலாளிகள், பருப்பு வகைகளை பதுக்கினர்.எப்போதும் இல்லாத வகையில், துவரம் பருப்பு, ஒரு கிலோ, 210 ரூபாய்; பாக்கெட், 225 ரூபாய் வரை உயர்ந்து, மக்களை திக்குமுக்காட வைத்தது. இதையடுத்து, பதுக்கல்காரர்கள் மீது மத்திய அரசு எடுத்த கடும் நடவடிக்கையால், 13 மாநிலங்களில், 75 ஆயிரம் டன் பருப்பு சிக்கியது.
பருப்பு வகைகளை பதுக்கியோர், அவசர அவசரமாக சந்தைக்கு அனுப்பி வருவதால், ஒரு மூட்டை துவரம் பருப்பு, 20 ஆயிரம் ரூபாயில் இருந்து, 17 ஆயிரம் ரூபாயாகக் குறைந்துள்ளது; கிலோவுக்கு, 30 ரூபாய் குறைந்துள்ளது. மற்ற பருப்பு வகைகளின் விலையும் கிலோவுக்கு, 15 ரூபாய் வரை குறைந்துள்ளன.இதுகுறித்து தமிழ்நாடு மளிகை வியாபாரிகள் சங்கத் தலைவர் எஸ்.பி.சொரூபன் கூறியதாவது:பதுக்கல்காரர்கள் மீது மத்திய அரசு எடுக்கும் கடும் நடவடிக்கை தொடர்வதாலும், தமிழக அரசு, நவ., 1 முதல், ஒரு கிலோ, 110 ரூபாய்க்கு விற்க முயற்சிப்பதாலும், பயந்து போன பெரு நிறுவனங்கள், முடக்கி வைத்த பருப்பு மூட்டைகளை சந்தைக்கு அனுப்பி வருகின்றன. இதனால், விலை குறைந்து வருகிறது.தீபாவளிக்குள், துவரம் பருப்பு ஒரு கிலோ, 150 ரூபாய்க்குள் வரும். மற்ற பருப்பு வகைகளின் விலையும் கிலோவுக்கு, 20 ரூபாய் குறைய வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
கடைகளில் பருப்பு வகைகள்இருப்பு வைக்க கட்டுப்பாடு
மொத்த விற்பனை மற்றும் சில்லரை விற்பனை வணிகர்கள், குறிப்பிட்ட அளவில், பருப்பு வகைகளை இருப்பு வைக்க, உணவு துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், பருப்பு வகைகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதுகுறித்து, சென்னை, சேப்பாக்கம் எழிலகத்தில், உணவு துறை அமைச்சர் காமராஜ், செயலர் சிவ்தாஸ் மீனா, உணவு வழங்கல் துறை ஆணையர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர், பருப்பு வணிகர்களுடன், நேற்று ஆலோசனை நடத்தினர். இதுகுறித்து, உணவு மற்றும் கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மாநகராட்சி பகுதிகளில் மொத்த வணிகர்கள், 2,500 குவின்டால் அனைத்து பருப்பு வகைகள்; சில்லரை வணிகர்கள், 62 குவின்டால் இருப்பு வைக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மற்ற பகுதிகளில், மொத்த வணிகர்கள், 1,250 குவின்டால்; சில்லரை வணிகர், 50 குவின்டால் இருப்பு வைக்க வேண்டும். மக்களை பாதிக்காத வகையில் குறைந்த விலையில், பருப்பு விற்பனை செய்ய ஒத்துழைப்பு வழங்குமாறு வணிகர்களிடம் கேட்டு கொள்ளப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|