பதிவு செய்த நாள்
22 ஜன2016
12:27
நாமக்கல்: நுகர்வு குறைந்ததால், கறிக்கோழி விலை கடந்த, 24நாட்களில், கிலோவுக்கு, 24ரூபாய் வரை சரிந்தது.தமிழகத்தில் பல்லடம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில், தினமும், எட்டு லட்சம் கிலோ கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகம் மட்டு மின்றி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
கடந்த புரட்டாசி மாதம், கறிக்கோழி நுகர்வு வெகுவாக குறைந்தது. அதன் எதிரொலியாக, கறிக்கோழி விற்பனை மந்தமாகி, கொள்முதல் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டது. அப்போது, கறிக்கோழி விலை, கிலோ, 55 முதல், 60 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. புரட்டாசி விரதம் முடிந்து ஐப்பசி மாதம் துவங்கியதும், கறிக்கோழி விலை, கிலோ, 80 ரூபாய்க்கு சென்றது.தீபாவளி பண்டிகை நேரத்தில், 'கொள்முதல் விலை உயரும்' என, பண்ணையாளர்கள் எதிர்பார்த்த நிலையில், அதற்கு மாறாக, நுகர்வு குறைவு மற்றும் தொடர்மழை காரணமாக, கறிக்கோழி விலை மீண்டும், கிலோ, 55 ரூபாயாக சரிந்தது. வடமாநில நுகர்வு அதிகமாக இருந்ததால், படிப்படியாக விலை உயர்ந்து, கடந்த மாதம், 28ம் தேதி, ஒரு கிலோ, 91 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இரண்டு நாட்கள் மட்டுமே இந்த விலை நீடித்தது. இதையடுத்து, படிப்படியாக கறிக்கோழி விலை சரியத் துவங்கியது. கடந்த, 24 நாளில், 24 ரூபாய் வரை சரிந்துள்ளது.இது குறித்து, கறிக்கோழி பண்ணையாளர்கள் கூறுகையில், 'தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, நுகர்வு குறைந்து, விலை படிப்படியாக சரியத்துவங்கி உள்ளது. அதன் காரணமாக, சில்லரை விலையும், 20 ரூபாய் குறைந்து, ஒரு கிலோ, 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தை பூசத்துக்கு பின் விலை உயரும் என எதிர்பார்க்கிறோம்' என்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|