பதிவு செய்த நாள்
18 பிப்2016
06:22
மும்பை : ‘‘மருந்து துறையில், சர்வதேச மையமாக இந்தியா உருவாகும்,’’ என, மத்திய, மருந்து, ரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சர், ஹன்ஸ்ராஜ் கங்காராம் ஆஹிர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மும்பையில், ‘மேக் இன் இந்தியா வாரம்’ விழாவையொட்டி, மருந்து துறையின் கருத்தரங்கை, ஹன்ஸ்ராஜ் துவக்கி வைத்து மேலும் பேசியதாவது: மருந்துகளின் உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பாக, மாநில அரசுகளுடன் கலந்து பேசி வருகிறோம். மருந்து தொழிற்சாலைகளை அமைக்கத் தேவையான நிலத்தை கையகப்படுத்துவது, சுற்றுச்சூழல் துறையின் அனுமதியை பெறுவது உள்ளிட்டவற்றில் காணப்படும் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண, மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது.
அதே சமயம், மக்கள் சுலபமாக வாங்கும் வகையில், மருந்து விலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முன்னர், மூலப் பொருட்களுக்கும், அவற்றின் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களுக்கும், வரி விதிப்பில், அதிக வேறுபாடு இருந்தது; அதில், தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால், மருந்து உள்ளிட்ட அனைத்து துறைகளும் பயன்பெறும். மஹாராஷ்டிர அரசு, தயாரிப்பு துறையுடன், பொருட்களை சந்தைப்படுத்தும் சூழலையும், முதலீட்டாளர்களுக்கு ஏற்றவாறு சாதகமாக உருவாக்கியிருப்பது, பாராட்டத்தக்கது. உலக அளவில், மூல மருந்துகள், மருந்துகள் தயாரிப்பிலும், நியாயமான விலையில் மருந்துகளை விற்பனை செய்வதிலும், இந்தியா முன்னிலையில் உள்ளது. சுலபமான வர்த்தக நடைமுறையால், இந்திய மருந்து துறை, சர்வதேச மையமாக உருவாகும்.
சர்வதேச மருந்து மையமாக உருவாகும் ஆற்றல், இந்தியாவிற்கு உள்ளது. மருந்து துறைக்கு, சர்வதேச தரத்திற்கு நிகரான ஒழுங்குமுறையை உருவாக்கினால், இது சாத்தியமாகும்.-திலிப் சிங்வி, நிர்வாக இயக்குனர், சன் பார்மாசூட்டிகல்ஸ்
இந்தியாவில், அமெரிக்க மருந்து நிர்வாகத்தின் விதிமுறைகளை கடைபிடிக்கும், மருந்து தொழிற்சாலைகள் அதிகம் உள்ளன. இந்திய மருந்து துறை, 2020ல், 5,500 கோடி டாலராக வளர்ச்சி பெறும்.-பங்கஜ் படேல், மூத்த துணை தலைவர், ‘பிக்கி’ அமைப்பு
நம் நாட்டில் செல்வத்தை உருவாக்கும் வேலை ஓர் உளவியல் தடையாக மாறியுள்ளது. அது வேலைவாய்ப்புகளை தோற்றுவிப்பதில் பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. செல்வத்தை உருவாக்குவது என்றால், அது கஜானாவை சூறையாடுவது என்று அர்த்தமல்ல! ஒருவர் தன் திறமையால் செல்வத்தை உருவாக்க முடியும் என்றால், அது நுாற்றுக்கணக்கானவர்களுக்கு வேலைகளை உருவாக்கும் காரணியாக அமைகிறது. ஆனால், அவரை நாம் ஒரு பாவி என்றே பார்க்கிறோம். அந்த மனநிலையை மாற்ற வேண்டும். அது நடந்தால், நிறைய விஷயங்கள் மாறும்.-மனோகர் பாரிக்கர் மத்திய அமைச்சர், வத்வானி பவுண்டேஷன் நடத்திய வேலை வாய்ப்பு மாநாட்டில்...
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|