பதிவு செய்த நாள்
12 மார்2016
02:43
புதுடில்லி:அடுத்த மாதம் முதல், பங்கு முதலீட்டாளர்களுக்கான டிவிடெண்ட் தொகைக்கு, 10 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வருகிறது. இதை தவிர்க்க, ஏராளமான நிறுவனங்கள், அவசர அவசரமாக, டிவிடெண்ட் அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன.
மத்திய அரசின், 2016 – 17ம் நிதியாண்டு பட்ஜெட்டில், ‘10 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட டிவிடெண்ட் தொகைக்கு, 10 சதவீத வரி விதிக்கப்படும், என, தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, நிறுவனங்கள், 20.47 சதவீதம் டிவிடெண்ட் வினியோக வரி செலுத்தி வருகின்றன. இத்துடன், மேலும், 10 சதவீத வரி விதிப்பு சேர்ந்துள்ளதால், மிக அதிக அளவில் பங்குகளை வைத்துள்ள நிறுவனர்கள் உள்ளிட்ட பங்கு முதலீட்டாளர்கள், அதிக வரி செலுத்த நேரிடும். இதை தவிர்க்க, ஏற்கனவே, நுாற்றுக்கும் அதிகமான நிறுவனங்கள், டிவிடெண்ட் அறிவிப்பை வெளியிட்டுள்ளன. இம்மாத இறுதிக்குள், மேலும் பல நிறுவனங்கள் டிவிடெண்ட் அறிவிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இரு தினங்களுக்கு முன், ஒரே நாளில், 50க்கும் அதிகமான நிறுவனங்களின் இயக்குனர் குழு கூட்டம் நடைபெற்றது. இதில், பெரும்பான்மையான நிறுவனங்களின், டிவிடெண்ட் பரிந்துரைக்கு, ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதன்படி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், பங்கு ஒன்றுக்கு, இடைக்கால டிவிடெண்டாக, 10.50 ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த வகையில், இந்நிறுவனம், 3,140 கோடி ரூபாய் டிவிடெண்ட் வழங்க உள்ளது. இதில், ரிலையன்ஸ் நிறுவனர்களான, அம்பானி குடும்பத்தினருக்கு மட்டும், 1,515 கோடி ரூபாய் கிடைக்கும்.
அதேபோல, இரு சக்கர வாகனங்களை தயாரிக்கும், ‘ஹீரோ மோட்டோகார்ப்’ நிறுவனத்தின் இயக்குனர் குழு, பங்கு ஒன்றுக்கு, 40 ரூபாய் இடைக்கால டிவிடெண்ட் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. நுகர்பொருள் தயாரிப்பு நிறுவனமான, மாரிக்கோ, பங்கு ஒன்றுக்கு, ஒரு ரூபாய் டிவிடெண்ட் வழங்குவதாக தெரிவித்துள்ளது.
இரு சக்கர வாகனங்களை தயாரிக்கும், பஜாஜ் ஆட்டோ நிறுவனம், இடைக்கால டிவிடெண்ட் ஆக, பங்கு ஒன்றுக்கு, 50 ரூபாய் வழங்குவதாக கூறி, முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திஉள்ளது. பொது துறையைச் சேர்ந்த கோல் இந்தியா நிறுவனம், அதன் பங்கு முதலீட்டாளர்களுக்கு, பங்கு ஒன்றுக்கு, 27.40 ரூபாய், இடைக்கால டிவிடெண்ட் வழங்குவதாக அறிவித்துள்ளது. இதன்படி, இந்நிறுவனம், 20,830 கோடி ரூபாய், இடைக்கால டிவிடெண்ட் வழங்க உள்ளது. இதில், இந்நிறுவனத்தில், 79.64 சதவீத பங்குகளை வைத்துள்ள, மத்திய அரசுக்கு, 17,308 ரூபாய் கிடைக்கும்.
அன்னியர்களுக்கு அல்ல* நிறுவனங்கள், அவற்றின் லாபத்தில் ஒரு பங்கை, பங்கு முதலீட்டாளர்களுக்கு பகிர்ந்தளிப்பது, ‘டிவிடெண்ட்’ எனப்படுகிறது* வரும் வாரங்களில், 100க்கும் அதிகமான நிறுவனங்களின் டிவிடெண்ட் அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது* புதிதாக அறிமுகமாகும் டிவிடெண்ட் வரி, இந்திய பங்கு முதலீட்டாளர்களுக்கு மட்டுமே பொருந்தும்; அன்னிய நிறுவனங்களின் நிறுவனர்கள், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் உள்ளிட்டோருக்கு, பொருந்தாது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|