பதிவு செய்த நாள்
13 மார்2016
07:53
புதுடில்லி : வசதி இருந்தும், வேண்டுமென்றே வங்கிக் கடனை திரும்பச் செலுத்தாமல் உள்ளோரின் பங்கு வெளியீட்டிற்கு தடை விதிக்க, பங்கு சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான, ‘செபி’ முடிவு செய்துள்ளது.
டில்லியில், ‘செபி’யின் இயக்குனர் குழு கூட்டம், நேற்று நடைபெற்றது. இதில், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ‘செபி’ தலைவர் யு.கே.சின்கா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து, யு.கே.சின்கா செய்தியாளர்களிடம் கூறியதாவது:வசதி படைத்த பலர், வங்கியில் வாங்கிய கடனை, திரும்பத் தர மறுக்கின்றனர். அவர்கள், ‘வேண்டுமென்றே கடனை திரும்பத் தராதோர்’ பட்டியலில் சேர்க்கப்படுகின்றனர். அத்தகையோருக்கு, வேறு எந்த வங்கியோ அல்லது நிதி நிறுவனமோ கடன் வழங்காது. அதுபோன்ற விதிமுறையை, ‘செபி’யும் உருவாக்கியுள்ளது.
அதன்படி, வசதியிருந்தும் கடனை திரும்பத் தராதோர் பட்டியலில் இடம்பெறும் நபர், பங்கு வெளியீட்டில் இறங்க தடை விதிக்கப்படும். அவர், பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட எந்த ஒரு நிறுவனத்தின் தலைமை பொறுப்பையும் ஏற்க முடியாது.பிற நிறுவனங்களின் நிர்வாக குழுக்களில், இயக்குனர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை வகித்தாலும், புதிய விதிமுறைப்படி, அவர் தகுதியிழந்தவர் ஆவார். மேலும், அவர், பரஸ்பர நிதியம், பங்கு தரகு நிறுவனம் போன்றவற்றையும் துவக்க முடியாது.இந்த புதிய விதிமுறைகள், தனி நபர் மற்றும் நிறுவனங்களுக்கு பொருந்தும். இது தொடர்பான ஆணை பிறப்பிக்கப்பட்டதும், புதிய விதிமுறை அமலுக்கு வரும்.இவ்வாறு அவர் கூறினார்.
* லண்டனுக்கு தப்பி ஓடி விட்ட விஜய் மல்லையா, வசதி இருந்தும் வங்கி கடனை திரும்ப தராதோர் பட்டியலில் உள்ளார். அவர், தன் யுனைடெட் புரூவரீஸ் உட்பட, பல்வேறு நிறுவனங்களின் நிர்வாக குழுக்களில் முக்கிய பொறுப்புகளில் உள்ளார். ‘செபி’யின் புதிய விதிமுறை அமலுக்கு வந்தால், விஜய் மல்லையா வகித்து வரும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தன்னிச்சையாக தகுதி இழப்பிற்கு உள்ளாவார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|