பதிவு செய்த நாள்
21 மார்2016
03:08
புதுடில்லி : மத்திய அரசின் அதிரடி நடவடிக்கைகளால், அடிப்படை கட்டமைப்பு துறையில் முடங்கிக் கிடந்த ஏராளமான திட்டங்கள் புத்துயிர் பெற்றுள்ளன.
இதன் விளைவாக, சிமென்டிற்கான தேவை அதிகரிக்கத் துவங்கியுள்ளது. இதை பயன்படுத்தி, சிமென்ட் நிறுவனங்கள், 50 கிலோ கொண்ட ஒரு மூட்டை சிமென்ட் விலையை, 40 – 50 ரூபாய் வரை உயர்த்தியுள்ளன. வரும் மாதம், மேலும், 15 ரூபாய் உயர வாய்ப்புள்ளதாக, இத் துறையினர் தெரிவிக்கின்றனர்.
மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி, 2016 – 17ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் உரையில், ‘அடிப்படை கட்டமைப்பு திட்டங்களுக்கு, 2.21 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும்’ என, அறிவித்திருந்தார். இதில், ரயில்வேக்கு, 1.20 லட்சம் கோடி ரூபாய்; சாலைகள் அமைக்க, 1 லட்சம் கோடி ரூபாய் பிரித்தளிக்கப்பட உள்ளது. இதனால், மத்திய அரசு, வரும் ஏப்ரல் முதல், சாலை திட்டங்களுக்கு ஒப்பந்தப் புள்ளிகள் கோரும் என்பதை கணக்கிட்டு, சிமென்ட் நிறுவனங்கள், மூட்டைக்கு, கூடுதலாக 15 ரூபாய் உயர்த்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, கடந்த பிப்ரவரியில், 6.57 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள, அடிப்படை கட்டமைப்பு திட்டங்களுக்கு, ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. இதில், சாலை திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, தற்போது சிமென்ட் விலை உயர்ந்துள்ள நிலையில், அடுத்த மாதம் முதல், 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள சாலை திட்டங்களுக்கு படிப்படியாக ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டால், சிமென்ட் தேவை எகிறும்; அதன் விலை உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இந்திய சிமென்ட் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் சஞ்சய் லடிவாலா பேசுகையில், ‘‘கோடையில், சிமென்ட் தேவையும், விற்பனையும் அதிகரிப்பது வழக்கம் தான். அதனால், விலை உயர்வு இருக்கும். இந்தியாவின் வடக்கு பகுதிகளில், சிமென்ட் தேவை அதிகரித்துள்ள போதிலும், தென் மாநிலங்களில், அதன் தேவை நிலையாக உள்ளது,’’ என்றார். சிமென்ட் நிறுவனங்கள் கூட்டு சேர்ந்து விலையை உயர்த்துவதாக கூறப்படும் குற்றச்சாட்டை அவர் மறுத்தார்.
அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில்,‘ தென் மாநிலங்களில் சிமென்ட்டிற்கான தேவை அதிகரிக்கவில்லை என்ற போதிலும், அடுத்த மூன்று மாதங்களில், அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த தாக்கத்துடன், தற்போது உயர்த்தப்பட்டுள்ள டீசல் விலையும், வரும் மாதங்களில் சிமென்ட் விலை உயர வழி வகுக்கும்’ என, கூறினார்.சிமென்ட் விலை உயர்வால், கட்டுமானச் செலவு அதிகரிக்குமே என்ற கவலையில் இருக்கின்றனர் வீடு கட்டுவோர்.
மாநிலம் விலை வடக்கு 276தெற்கு 344மேற்கு 285கிழக்கு 290(50 கிலோ சிமென்ட் / விலை ரூபாயில்)
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|