பதிவு செய்த நாள்
29 மார்2016
23:29
சிட்னி : ‘‘இந்தியாவில் தொழில் துவங்குவதற்கான நடவடிக்கைகள் சுலபமாக்கப்பட்டுள்ளன. எனினும், அதை மேலும் சுலபமாக்கினால், அன்னிய மற்றும் உள்நாட்டு முதலீடுகள் குவியும். அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது,’’ என, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில், சிட்னி நகர வணிக கல்லுாரி ஒன்றில், அவர் ஆற்றிய உரை: இந்தியாவில், காப்பீடு, ரயில்வே, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகள், அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்க்க முடியாத நிலையில் இருந்தன. பிரதமர் மோடி தலைமையிலான அரசு அமைந்த பின், இந்திய பொருளாதாரம் மேலும் தாராளமயமாக்கப்பட்டது. இதன் காரணமாக, காப்பீடு, ரயில்வே உள்ளிட்ட துறைகளில் அன்னிய நேரடி முதலீடு குவியத் துவங்கியுள்ளது.
அன்னிய நேரடி முதலீடுகளுக்கு தடையாக உள்ள, தேவையற்ற நிபந்தனைகள் நீக்கப்பட்டன; வர்த்தக நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டன. அன்னிய நேரடி முதலீட்டிற்கு ஏற்ற நாடாக, இந்தியா உருவெடுத்துள்ளது. இந்த நிலையிலும், தொழில் துவங்குவதற்கான நடைமுறைகளை மேலும் சுலபமாக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. நிலையான கொள்கை, விரைவாக தொழில் துவங்கும் வசதி, எளிதான அனுமதி நடைமுறைகள் போன்றவற்றின் மூலம், ‘இந்தியாவில் தொழில் துவங்குவது சுலபம்’ என்ற கண்ணோட்டத்தை, உலக அரங்கில் ஏற்படுத்தும் முயற்சியில், மத்திய அரசு ஈடுபட்டு உள்ளது.
வரி பிரச்னைகளில் விரைவில் தீர்வு காணவும், சர்வதேச நிலவரப்படி, நிறுவன வரியை, படிப்படியாக, 25 சதவீதமாக குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி மசோதா, விரைவில் நிறைவேற்றப்படும். சர்வதேச வர்த்தகத்தின் தாக்கத்தால், பங்கு மற்றும் அன்னிய செலாவணி சந்தைகளில் ஏற்றத்தாழ்வு நிலவுகிறது. அதேசமயம் உலகளாவிய மந்தநிலையிலும், இந்திய பொருளாதாரம், 7.5 சதவீதம் வளர்ச்சி கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|