பதிவு செய்த நாள்
09 ஏப்2016
06:12
வாஷிங்டன் : ‘வளரும் நாடுகளுடன் ஒப்பிடும்போது, முதலீட்டாளர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக, இந்தியா ஜொலிக்கிறது’ என, உலக வங்கியின் அங்கமான, ஐ.எப்.சி., எனப்படும், சர்வதேச நிதி கழகம் பாராட்டு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த, ஐ.எப்.சி., வளரும் நாடுகளில், தனியார் துறையை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இத்துடன், பல்வேறு நாடுகளில் முதலீடுகளை மேற்கொள்வது; தனியார் துறை சொத்துக்களை நிர்வகிப்பது உள்ளிட்ட பணிகளிலும் அது ஈடுபட்டுள்ளது. இந்த வகையில், ஐ.எப்.சி., இந்தியாவில், ரூபாயில் முதலீடு செய்யக் கூடிய, கடன் பத்திரங்களை வெளியிட்டு வருகிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வட்டத்தில், ‘மசாலா பாண்டு’ என்றழைக்கப்படும், இக்கடன் பத்திரங்களில், அதிக அளவில் அன்னிய முதலீடு குவிந்து வருகிறது.
கடந்த, இரண்டரை ஆண்டுகளில், ஐ.எப்.சி., 11 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, மசாலா பாண்டுகளை வெளியிட்டுள்ளது. இவற்றில், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஆர்வமுடன் முதலீடு செய்துள்ளனர். இந்த கடன் பத்திரங்கள் மூலம் திரட்டப்பட்ட தொகை, இந்தியாவில், தனியார் துறையில் நடைபெற்று வரும், 11 திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் வளர்ச்சி காரணமாக, அயல்நாட்டினர் ஆர்வமுடன் கடன் பத்திரங்களில் முதலீடு செய்து வருவதால், உற்சாகம் அடைந்துள்ள, ஐ.எப்.சி., மேலும், 9,000 கோடி ரூபாய் மதிப்பிலான மசாலா பாண்டுகளை வெளியிட உள்ளது.
இந்திய பங்குச் சந்தைகளில், முதலீடு செய்யக்கூடிய, கடன் பத்திரங்களையும், ஐ.எப்.சி., வெளியிட்டு வருகிறது. நிதி வட்டாரத்தில், ‘மகாராஜா பாண்டு’ என, அழைக்கப்படும் இந்த கடன் பத்திரங்கள் மூலம், 16 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட, ஐ.எப்.சி., திட்டமிட்டுள்ளது.இந்தியாவில், கடந்த, 1958ம் ஆண்டு முதல், ஐ.எப்.சி., முதலீடு செய்து வருகிறது. இந்தியாவில், ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீடுகளை, ஐ.எப்.சி., செய்துள்ளது; இது, பிற நாடுகளில் மேற்கொள்ளப்பட்டதை விட, அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
தனித்தன்மைஅனைத்து வளரும் நாடுகளும் கடுமையான சவால்களை சந்தித்து வரும் நிலையில், இந்தியா, தனித்தன்மையுடன் வளர்ச்சி கண்டு வருகிறது. சீனா, கடும் பொருளாதார மந்தநிலையில் சிக்கியுள்ளது. அதுபோல, பிரேசில், தென் ஆப்ரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகளின் வளர்ச்சியும், பல்வேறு பிரச்னைகளால் சரிவடைந்துள்ளது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய, ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பில், இந்தியா மட்டுமே, சிறப்பான வளர்ச்சியுடன் பிரகாசமாக ஜொலிக்கிறது. அதனால் தான், இந்தியாவில் வெளிநாட்டினர் அதிக ஆர்வமுடன் முதலீடு செய்து வருகின்றனர்.– ஜிங்டங் ஹு, துணைத் தலைவர், ஐ.எப்.சி.,
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|