பதிவு செய்த நாள்
16 ஏப்2016
07:33
வாஷிங்டன் : ‘‘இந்தியாவில் பணவீக்கம் குறைந்து, இந்தாண்டு பருவ மழை தப்பாமல் பெய்தால், வங்கிகளுக்கான, ‘ரெப்போ’ வட்டி விகிதத்தை, ரிசர்வ் வங்கி மேலும் குறைக்கும்,’’ என, ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
பன்னாட்டு நிதியம் மற்றும் உலக வங்கி கூட்டங்களில் பங்கேற்க, வாஷிங்டன் வந்த அவர், ‘வால் ஸ்டிரீட்’ பத்திரிகைக்கு அளித்த பேட்டி:சர்வதேச பிரச்னைகளால், வளரும் நாடுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா, சிறப்பான பொருளாதார வளர்ச்சியை கண்டு வருகிறது. பருவ மழைக்கும் விலைவாசிக்கும் உள்ள தொடர்பை, இந்தியர்கள் ஏற்க மறுத்தாலும், துரதிர்ஷ்டவசமாக, இந்தியா இன்னும், பருவ மழையை சார்ந்தே உள்ளது. கடந்த, இரண்டு ஆண்டுகளாக, பருவ மழை பொய்த்தது. இம்முறை, சிறப்பான பருவ மழையை எதிர்பார்க்கிறோம். அவ்வாறு மழை பெய்து, விலைவாசி மேலும் குறையும்பட்சத்தில், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கான, ‘ரெப்போ’ வட்டியை குறைக்கும்.
வளரும் நாடுகள் பாதிக்கப்படும் என்பதால், அமெரிக்க மத்திய வங்கி, வட்டி விகிதங்களை உயர்த்துவதில், நிதான போக்கை கடைபிடித்து வருகிறது. வரவேற்கத்தக்க இந்த நடவடிக்கைக்கு காரணமான, அமெரிக்க மத்திய வங்கி தலைவர் ஜேனட் யெல்லன், பாராட்டுக்குரியவர்.இவ்வாறு அவர் கூறினார்.
ஐந்து ஆண்டுகளுக்கு பின் ரிசர்வ் வங்கி, கடந்த, 2ம் தேதி, வங்கிகளுக்கான, ‘ரெப்போ’ வட்டி விகிதத்தை, 0.25 சதவீதம் குறைத்து, 6.5 சதவீதமாக நிர்ணயித்துள்ளது. ஐந்து ஆண்டுகளுக்குப் பின், இந்த அளவிற்கு, வட்டி குறைக்கப்பட்டுள்ளது. வங்கிகள், ஏற்கனவே, 0.50 சதவீதம் வரை, கடன்களுக்கான வட்டியை குறைத்துள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|