பதிவு செய்த நாள்
04 ஜூலை2016
07:09
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியான பி.எப்., மற்றும் பொது சேமநல நிதியான பி.பி.எப்., திட்டங்களின் விதிமுறையில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளன. பி.பி.எப்., நீண்ட கால பாதுகாப்பிற்கான திட்டமாக அமைகிறது. இந்த திட்டத்தின் கால அளவு குறைந்த பட்சம் 15 ஆண்டுகளாகும். வருமான வரிச்சலுகை உள்ளிட்ட அம்சங்களை இது கொண்டிருக்கிறது. இதற்கு முன், பி.பி.எப்., கணக்கை 15 ஆண்டுகளுக்கு முன்பாக முடித்துக்கொள்ள முடியாது. பணம் செலுத்தாமல் கணக்கு முடங்கிய நிலையில் இருந்தால் கூட, 15 ஆண்டுகள் கழித்தே பணத்தை எடுக்க முடியும். அதற்கு முன் தேவை என்றால் ஏழாம் நிதியாண்டு முதல் பகுதியளவு தொகையை மட்டுமே எடுத்துக்கொள்ள அனுமதி உண்டு.ஆனால், அண்மையில் இது தொடர்பாக மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. நிதி அமைச்சகம் இதற்கான அறிவிக்கையை வெளியிட்டிருக்கிறது. அதன் படி, பி.பி.எப்., கணக்கு துவக்கப்பட்டு ஐந்து நிதியாண்டுகள் முடிந்திருந்தால், பாதியில் கணக்கை முடித்துக்கொண்டு, முழு பணத்தையும் எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படும். ஆனால், மருத்துவ அவசரத்தேவை மற்றும் உயர் கல்வி ஆகிய இரண்டு காரணங்களுக்காக மட்டுமே இதை செய்ய முடியும். பி.பி.எப்., கணக்கு வைத்திருப்பவர் அல்லது அவரது குடும்ப உறுப்பினரின் தீவிர அல்லது உயிருக்கு ஆபத்தான நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பணம் தேவைப்படும் போது இவ்வாறு செய்யலாம். அதேபோல பிள்ளைகளின் உயர் கல்வி தேவைக்காக இதை பயன்படுத்திக்கொள்ளலாம். எனினும், இந்த இரண்டு காரணங்களுக்கான உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இவ்வாறு முன்கூட்டியே பணத்தை விலக்கி கொள்ளும்போது ஒரு சதவீத வட்டி பிடித்தம் செய்யப்படும்.பி.எப்., பென்ஷன்இதேபோல பி.எப்., திட்டத்தின் கீழ் உறுப்பினர்கள் பென்ஷன் தொகையை உயர்த்திக்கொள்ளும் வகையில் புதிய விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் படி, உறுப்பினர்கள் பென்ஷன் தொகையை 4 சதவீதம் அல்லது 8.16 சதவீதம் உயர்த்திக்கொள்ள வாய்ப்பளிக்கப்படும். பென்ஷன் தொகையை உயர்த்திக்கொள்ள, உறுப்பினர்கள் பென்ஷன் பெறும் காலத்தை ஒரு ஆண்டு அல்லது இரு ஆண்டுகள் தள்ளிப்போட வேண்டும். பி.எப்., திட்டத்தில் ஒரு தொகை பென்ஷன் கணக்கில் சேர்க்கப்படும். 58 வயது முதல் பென்ஷன் கிடைக்கும். இதை இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பெற்றுக்கொள்ள சம்மதித்தால் 60 வயது முதல் 8.16 சதவீதம் கூடுதலாக பென்ஷன் வழங்கப்படும். ஒரு ஆண்டுக்குப் பிறகு பெற்றுக்கொள்ள சம்மதித்தால் 4 சதவீதம் கூடுதலாக பென்ஷன் கிடைக்கும். இந்த காலத்தில் உறுப்பினர்கள் எந்த பங்களிப்பும் செலுத்த வேண்டாம்.ஏற்கனவே பி.எப்., பென்ஷன் பெறாதவர்கள் மற்றும் 58 வயதில் குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் பணியில் இருந்தவர்களுக்கு இது பொருந்தும். இதற்கான கோரிக்கையை பி.எப்., அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|