பதிவு செய்த நாள்
10 ஜூலை2016
02:45
புதுடில்லி:‘‘பிரிட்டனுடன் தாராள வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்வதற்கான வாய்ப்புகள் குறித்து, இந்தியா ஆராய்ந்து வருகிறது,’’ என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் பேசியதாவது:ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேற முடிவு செய்ததைத் தொடர்ந்து அந்நாடு, இந்தியா உடனான வர்த்தகத்தை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக, டில்லி வந்த பிரிட்டன் வர்த்தக துறை அமைச்சர் சஜித் ஜாவித் உடன், முதற்கட்ட பேச்சு துவங்கியுள்ளது. இதையடுத்து, இரு தரப்பிற்கும் இடையே விரிவான பேச்சு நடைபெறும்.
பிரிட்டனில், இந்தியா மிகப் பெரிய அளவில் முதலீடு செய்துள்ளது. அங்கு, இந்திய முதலீட்டாளர்கள் ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளனர். பிரிட்டன் உடனான வர்த்தக உறவு, இந்தியாவுக்கு முக்கியமானது. இந்தியா, ஐரோப்பிய கூட்டமைப்புடன், தாராள வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளது. இதற்கான பணிகள், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து, பிரிட்டன் வெளியேற முடிவு செய்துள்ளது.
அதனால், ஐரோப்பிய கூட்டமைப்பு உடனான, தாராள வர்த்தக ஒப்பந்த விதிமுறைகளை முழுமையாக மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதேசமயம், பிரிட்டனுடன், இந்தியா, தாராள வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள வாய்ப்பு உள்ளது. இது தொடர்பாக, இரு நாடுகளின் பிரதிநிதிகள் இடையே விரைவில் பேச்சு துவங்கும். இவ்வாறு அவர் கூறினார். பரஸ்பர வர்த்தகம்:இந்தியா – பிரிட்டன் பரஸ்பர வர்த்தகம், 2014 – 15ல், 1,433 கோடி டாலர்; 2015 – 16ல், 1,400 கோடி டாலர் என்ற அளவில் இருந்தது. கடந்த, 2006 – 2016 வரையிலான நிதியாண்டுகளில், பிரிட்டன், இந்தியாவில், 2,310 கோடி டாலர் முதலீடு செய்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|