பதிவு செய்த நாள்
18 ஜூலை2016
03:30
பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கமான போக்கு நிலவும் சூழலில், பலன் தரக்கூடிய பங்குகளை தேர்வு செய்ய கவனம் செலுத்த வேண்டிய துறைகள் எவை?
கச்சா எண்ணெய் விலை போக்கு, சீன பொருளாதார நிலையின் பாதிப்பு, வட்டி விகித போக்கு உள்ளிட்ட பல அம்சங்கள் பங்குச் சந்தையின் போக்கில், தாக்கம் செலுத்தி வந்த நிலையில், பிரெக்ஸிட் பிரச்னை உலக பொருளாதாரத்திற்கு புதிய சவாலாக உருவெடுத்துள்ளது. இவற்றோடு உள்நாட்டு அம்சங்களும் தாக்கம் செலுத்துவதால், இந்திய பங்குச் சந்தையில் எளிதில் கணிக்க முடியாத ஏற்ற இறக்கமான போக்கு நிலவுவதாக பங்குச் சந்தை வல்லுனர்கள் கருதுகின்றனர்.
இந்த பின்னணியில், குறிப்பிட்ட காரணங்களை அடிப்படையாக கொண்டு, ஒரு சில துறை பங்குகளை தவிர்க்கும் போக்கும், முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவுகிறது. உதாரணமாக, பிப்ரவரி மாதத்தில், பெரும்பாலானோர் பொதுத்துறை வங்கி பங்குகளை தவிர்த்து வந்தனர். வங்கிகளின் வாரா கடன் பிரச்னை பெரிதாக பேசப்பட்ட நிலையில், பொதுத்துறை வங்கி பங்குகள் பாதகமாக கருதப்பட்டன. அப்போது நிப்டி பி.எஸ்.யு., பாங்க் இன்டெக்ஸ் சரிந்து, 1,968 புள்ளிகளை தொட்டது. ஆனால், தற்போது இந்த குறியீடு, 46 சதவீதம் உயர்ந்து, 2,882 புள்ளிகளாக இருக்கிறது. இந்த பங்குகளில் சிறந்தவற்றை தேர்வு செய்திருந்தால், இப்போது நல்ல பலனை பெற்றிருக்கலாம்.
இப்படி பரவலாக பின்பற்றப்படும் போக்கிற்கு மாறாக, நல்ல பங்குகளை கவனமாக தேர்வு செய்திருந்தால், நல்ல பலனை பெறலாம் என்பதை பங்குச் சந்தை வல்லுனர்கள், ஒரு உத்தியாக சுட்டிக் காட்டுகின்றனர். இதன் அடிப்படையில், பரவலாக நிலவும் போக்கிற்கு எதிராக, நல்ல பங்குகளை கவனமாக தேர்வு செய்ய வாய்ப்புள்ள நான்கு துறைகளை வல்லுனர்கள் ஆய்வின் அடிப்படையில், ‘பிஸ்னஸ் ஸ்டாண்டர்ட்’ நாளிதழ் அடையாளம் காட்டியுள்ளது:
மருந்தகத்துறைகடந்த ஓராண்டில், இந்த துறையின் முன்னணி நிறுவனங்கள், சரிவை சந்தித்துஉள்ளன. இந்த நிறுவனங்களின் தரக்கட்டுப்பாடு தொடர்பாக, அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத் துறையின் எச்சரிக்கை கடிதங்கள் மற்றும் இறக்குமதி கட்டுப்பாடுகள், பாதிப்பை உண்டாக்கின. எனினும் மருந்தக துறைக்கான வளர்ச்சி வாய்ப்புகள், பிரகாசமாக இருப்பதாக கருதப்படுகிறது. இந்த துறை, ரிஸ்கிற்கு ஏற்ற லாபம் அளிக்க கூடியதாக இருக்கிறது.
தகவல் தொழில்நுட்பம்இந்த துறையைச் சேர்ந்த நிறுவன பங்குகள், சரிவை சந்தித்து வருகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் பிரிட்டனின் முடிவு மற்றும் ஐரோப்பாவில் பொருளாதார மந்தநிலை ஆகியவற்றால், இத்துறை நிறுவனங்களின் லாபம் பாதிக்கப்படலாம் எனும் கருத்து நிலவுகிறது. மேலும், மாறிவரும் தொழில்நுட்பத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல், பல நிறுவனங்கள் தடுமாறலாம் என்றும் கருதப்படுகிறது. ஆனால் இந்த கவலைகள், மிகையானவை என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. கடந்த காலங்களிலும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தொழில்நுட்ப மாற்றங்களை, வெற்றிகரமாக எதிர்கொண்டிருக்கின்றன.
டெலிகாம் இந்த துறையில், முதலீட்டாளர்களுக்கு பொறுமை அவசியம். நிறுவனங்கள் பல பிரச்னைகளை சந்தித்து வரும் நிலையில், போட்டி அதிகரிப்பது லாப விகிதத்தை பாதிக்கும் எனும் அச்சம் உள்ளது. ஆனால், நீண்டகால நோக்கில் பலன் தரக்கூடிய பல சாதகமான அம்சங்களையும், இத்துறை கொண்டிருக்கிறது. செயல்திறன் வாய்ந்த நிறுவனங்கள் தங்கள் நிலையை வலுப்படுத்திக் கொள்ளும்.
எரிசக்திஎண்ணெய் அகழ்வு நிறுவனங்கள், எண்ணெய் மார்க்கெட்டிங் நிறுவனங்கள் மற்றும் துணை நிறுவனங்களை கொண்ட பரந்து விரிந்த துறை இது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால், எண்ணெய் அகழ்வு நிறுவன பங்குகள் நல்ல பலனைத் தரலாம் என்கிறனர்.
கவனம் தேவைபரவலாக பலரும் தவிர்க்கும் துறை பங்குகளை தேர்வு செய்யும்போது, கவனமாக இருப்பதும் அவசியம் என்கின்றனர். பரவலான முதலீட்டாளர்களின் போக்கிற்கு எதிரான தன்மையை மட்டும் அடிப்படையாக கொள்ளாமல், நிறுவனங்களின் சந்தை மதிப்பு, நிர்வாக தரம், வளர்ச்சி வாய்ப்புகள், பாலன்ஸ் ஷீட்டில் கடன் நிலவரம் உள்ளிட்ட அம்சங்களை பரிசீலித்து, அவற்றின் அடிப்படையில் நல்ல பங்குகளை தேர்வு செய்ய வேண்டும். மேலும், இந்த உத்தியோடு குறிப்பிட்ட துறையில் மட்டும், மிகை கவனம் செலுத்துவதையும் தவிர்க்க வேண்டும். பங்குகள் முதலீடு பரவலாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட துறையில், 20 சதவீதத்திற்கு மிகாமல் இருப்பது நல்லது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|