பதிவு செய்த நாள்
01 ஆக2016
23:58
புதுடில்லி : ‘நாட்டின் தயாரிப்பு துறை, முந்தைய நான்கு மாதங்களில் இல்லாத அளவிற்கு, கடந்த ஜூலையில், சிறப்பான வளர்ச்சி கண்டுள்ளது’ என, மார்கிட் நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விபரம்: இந்திய பொருட்களுக்கு, உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் தேவை அதிகரித்து வருகிறது. இந்தாண்டு மார்ச் முதல், புதிய வியாபார, ‘ஆர்டர்’ அதிக அளவில் குவிந்து வருகிறது. ஏப்., – ஜூன் வரையிலான காலாண்டில், தயாரிப்பு துறை, சற்று சுணக்கமாக இருந்தது. எனினும், ஜூலையில் புதிய ஆர்டர் அதிகரித்ததால், நிறுவனங்களின் உற்பத்தியும் உயர்ந்துள்ளது.
மீண்டும் எழுச்சி :இது, தயாரிப்பு துறையின் நிலவரத்தை மதிப்பிடும், நிக்கி – மார்கிட் இந்தியாவின், எம்.பி.எம்.ஐ., குறியீடு, 51.8 புள்ளிகளாக அதிகரிக்க துணை புரிந்துள்ளது. இது, முந்தைய ஜூன் மாதத்தில், 51.7 ஆக இருந்தது. நாட்டின் தயாரிப்பு துறை, மீண்டும் எழுச்சி பெற்று வருவதை, இது சுட்டிக் காட்டுகிறது.கடந்த ஜூலையில், புதிய வியாபார ஆர்டர் அதிகம் குவிந்துள்ளது. அத்துடன், உற்பத்தியும் உயர்ந்துள்ளது. கடந்த மார்ச் முதல், உற்பத்தி, வேகமாக அதிகரித்து வருகிறது. எனினும், புதிய வேலைவாயப்புகள் உருவாவது, அதிகரிக்கவில்லை. ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிறுவனங்களில், 1 சதவீதம் மட்டுமே, கூடுதல் வேலைவாய்ப்பு வழங்கியுள்ளன.
தயாரிப்பு துறை, மந்தநிலையில் இருந்து மீண்டு வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டாலும், அது, நிலையாக இருக்குமா என, நிறுவனங்கள் அஞ்சுகின்றன. அதனால், பணியாளர்களை அதிகரிக்காமல் உள்ளன. எனினும், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பில் ஏற்பட்ட சரிவு, ஏற்றுமதி வாய்ப்பை அதிகரித்து உள்ளது. இந்தாண்டு ஜனவரி முதல், புதிய வியாபாரங்களில், ஏற்றுமதிஅதிகரித்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.நாட்டின் பணவீக்கம், நீண்ட கால சராசரி அளவுடன் ஒப்பிடும்போது, குறைந்துள்ளது. அதனால், வரும் வாரம், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை அறிவிப்பில், வட்டி விகிதம் குறைக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
வட்டி விகிதம் :கடந்த ஜூன் மாதம், ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் பேசும்போது, ‘பருவமழையை பொறுத்து, இந்தாண்டின் பிற்பகுதியில், வட்டி குறைப்பு இருக்கலாம்’ என, தெரிவித்திருந்தார். தற்போது, நாடு முழுவதும் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், ரிசர்வ் வங்கி, வட்டி விகிதத்தை குறைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இந்திய தொழில் துறையும், இதையே எதிர்பார்த்துள்ளது. வங்கிகளின் வட்டி மேலும் குறைக்கப்படும்பட்சத்தில், தொழில்துறையில், மேலும் முதலீடுகள் குவிய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|