பதிவு செய்த நாள்
11 செப்2016
03:57
புதுடில்லி;‘‘அரசு துறைகளுக்கு பொருட்களை சப்ளை செய்வதில், நிறுவனங்கள் ரகசியமாக கூட்டு சேர்ந்து, விலை நிர்ணயம் செய்வதை தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளால், அரசின் கொள்முதல் செலவு குறையும்,’’ என, சந்தை போட்டி கட்டுப்பாட்டு ஆணையமான – சி.சி.ஐ., தலைவர் டி.கே.சிக்ரி தெரிவித்து உள்ளார்.
அவர், மேலும் பேசியதாவது:இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், அரசு துறைகளுக்கு தேவைப்படும் பொருட்களுக்கான செலவினம், 30 சதவீதமாக உள்ளது. மத்திய பட்ஜெட்டில், ரயில்வே, பாதுகாப்பு மற்றும் தொலைத்தொடர்பு துறைகளுக்கு ஒதுக்கப்படும் நிதியில், 50 சதவீதம், பொருட்களை கொள்முதல் செய்யவும், சேவைகளைப் பெறவும் செலவிடப்படுகிறது. இது, ஆரோக்கிய பராமரிப்பு துறையில், 26 சதவீதமாக உள்ளது. ரகசியமாக கூட்டுபொருட்களை சப்ளை செய்வதற்காக, நிறுவனங்கள் அளிக்கும் ஒப்பந்த புள்ளிகளை, அரசு அதிகாரிகள் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும். நிறுவனங்கள் குறிப்பிடும் விலை, சந்தை நிலவரத்தை பிரதிபலிக்கிறதா என, ஆராய வேண்டும்.
நிறுவனங்கள் ரகசியமாக கூட்டு வைத்துக் கொண்டு, விலையை உயர்த்தி உள்ளனவா என்பதை ஆய்வு செய்து, உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும். இது போன்ற நடவடிக்கைகள் மூலம், அரசின் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான கொள்முதல் செலவில், ௨ சதவீதத்தை மிச்சப்படுத்தினால் கூட, பட்ஜெட்டில், நிதிப் பற்றாக்குறை என்பதே இருக்காது. நிறுவனங்கள் கூட்டணி அமைத்துக் கொண்டு, விலை நிர்ணயம் செய்வது, ஒப்பந்தப் புள்ளி கோருவது ஆகியவை, சந்தைப் போட்டி சட்டத்தின் கீழ் குற்றமாகும். இத்தகைய நடவடிக்கைகளை, தற்போது, மத்திய, மாநில அரசு துறைகள், பொதுத் துறை நிறுவனங்கள் ஆகியவை, தீவிரமாக கண்காணிக்க துவங்கியுள்ளன. ஒப்பந்தப் புள்ளி நடைமுறைகளில், நிறுவனங்கள் கூட்டு சேர்ந்து செயல்படுகின்றனவா என, அரசு அதிகாரிகள் ஆராய்கின்றனர். ஏலத்தில் பங்கேற்போர், தனிப்பட்ட நபர்களா அல்லது ஒரே நிறுவனத்தைச் சேர்ந்தவர்களா எனவும் ஆய்வு செய்கின்றனர். ஒப்பந்தப் புள்ளியில், ஒரே மாதிரியாக விலை குறிப்பிட்டிருந் தால், உயரதிகாரியிடம் புகார் செய்யப்படுகிறது. இதற்கு முன், இது போன்ற நடைமுறை கிடையாது.
அதிகாரிகள் ஆய்வு:பொதுத் துறை நிறுவனம், அனைத்து ஒப்பந்தப் புள்ளிகளையும், ஒரே மாதிரி பாவிக்கும்; குறைந்த விலை குறிப்பிடுவோருக்கு உரிமம் வழங்கும். இப்போது, குறைந்த விலையாக தோன்றுவது, உண்மையிலேயே குறைந்த விலை தானா என, அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர். இத்தகைய நடவடிக்கையால், பொருட்களை கொள்முதல் செய்வதற்கான அரசின் செலவினம், குறிப்பிடத்தக்க அளவிற்கு குறையும்.இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டு சேர்ந்து, பொருட்களின் விலையை உயர்த்தும் நிறுவனங்களுக்கு, அபராதம் விதிக்கப்படுகிறது. நிறுவனங்கள், விதிகளை மீறாமல், ஒழுக்கத்துடன் செயல்பட வேண்டும் என, விரும்புகிறோமே தவிர, அபராதம் விதிப்பது, எங்கள் நோக்கம் அல்ல.– டி.கே.சிக்ரி, தலைவர் இந்திய சந்தை போட்டி கட்டுப்பாட்டு ஆணையம்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|