பதிவு செய்த நாள்
15 அக்2016
07:01
புதுடில்லி : ‘‘இந்தியா – ஐரோப்பிய கூட்டமைப்புடன், தாராள வர்த்தக ஒப்பந்தம் செய்து கொண்டால், ஜவுளித் துறையால், சர்வதேச போட்டியை சுலபமாக சமாளிக்க முடியும்,’’ என, மத்திய ஜவுளித் துறை செயலர் ராஷ்மி வர்மா தெரிவித்து உள்ளார்.
அவர், மேலும் கூறியதாவது: வங்கதேசம், ஐரோப்பிய நாடுகளுக்கான ஜவுளி ஏற்றுமதிக்கு, முன்னுரிமை சலுகையும், வரி தள்ளுபடியும் பெறுகிறது. ஐரோப்பிய நாடுகள், சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றன. ஜவுளி உற்பத்திச் சார்ந்த சுற்றுச்சூழல் விதிமுறைகளை கடைபிடிப்பதில், வங்கதேசத்தை விட, இந்தியா சிறந்து விளங்குகிறது. எனினும், இந்தியா – ஐரோப்பிய கூட்டமைப்புடன், எப்.டி.ஏ., எனப்படும், தாராள வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து ஆகாததால், வங்கதேசம் அனுபவிக்கும் சலுகைகளை, நம் ஜவுளி ஏற்றுமதியாளர்கள் பெற முடியாத நிலை உள்ளது. இதை, மத்திய வர்த்தக அமைச்சகத்திடம், ஜவுளி அமைச்சகம் எடுத்துக் கூறியுள்ளது. ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக, வர்த்தக அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால், ஜவுளி ஏற்றுமதியாளர்கள், சர்வதேச போட்டியை சுலபமாக சமாளிக்க முடியும்.
இந்திய ஜவுளித் துறை, திருப்புமுனையை சந்திக்கக் கூடிய தருணம் இது. ஒருபுறம், சீனாவின் ஜவுளி ஏற்றுமதி குறைந்து வருகிறது. மறுபுறம், நியாயமான விலையில், தரமான இந்திய ஜவுளியின் ஏற்றுமதி அதிகரித்து வருகிறது. இதே நிலை தொடர்ந்தால், சர்வதேச ஜவுளி வர்த்தகத்தில், இந்தியா, குறிப்பிடத்தக்க சக்தியாக உருவெடுக்கும். ஜவுளித் துறைக்கு, பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள, ஊக்கச் சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அவற்றை, ஜவுளித் துறையினர் முழுமையாக பயன்படுத்தி, வளர்ச்சி காண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|