பதிவு செய்த நாள்
29 அக்2016
07:48
புதுடில்லி : ‘இந்தாண்டு, தீபாவளி, கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தில், பல்வேறு பயன்பாடுகளுக்கு வழங்கப்படும் அன்பளிப்பு அட்டைகளின் விற்பனை, 1 கோடியை தாண்டும்’ என, க்விக்சில்வர் நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிறுவனம், 500 நகரங்களில், 4 லட்சத்திற்கும் அதிகமானோரிடம், பண்டிகை கால பரிசுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டது. அதில், 73 சதவீதத்திற்கும் அதிகமானோர், இந்தாண்டு ரொக்கத்திற்கு பதிலாக, நண்பர்கள், உறவினர்கள் ஆகியோருக்கு, ‘கிப்ட் கார்ட்’ எனப்படும், பண மதிப்பை கொண்ட அன்பளிப்பு அட்டைகளை வழங்க உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.ஆய்வில் பங்கேற்ற நிறுவனங்களில், 70 சதவீத கார்ப்பரேட் நிறுவனங்கள், அவற்றின் ஊழியர்களுக்கு, விருப்பமான பொருட்களை தேர்வு செய்து கொள்ளும் வசதியுள்ள, அன்பளிப்பு அட்டைகளை அளிக்க உள்ளதாக தெரிவித்து உள்ளன.
பல நிறுவனங்கள், இந்தாண்டு தனிச்சிறப்பு கொண்ட பிரத்யேக அன்பளிப்பு அட்டைகளை, ஊழியர்களுக்கு வழங்கியுள்ளன. ஆய்வில், 45 சதவீத நிறுவனங்கள், பணியாளர்களை அசத்த, புதுமையான பொழுது போக்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்புடன், அதிக மதிப்புள்ள அன்பளிப்பு அட்டைகளை வழங்குவதாக கூறியுள்ளன. இந்தாண்டு, தீபாவளி, கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு, பல நிறுவனங்கள், புதிய பிராண்டுகளில், அன்பளிப்பு அட்டைகளை வெளியிட்டு உள்ளன.
பல்பொருள் அங்காடிகளில் பொருட்கள் வாங்கவும், ஓட்டல்களில் தங்கவும், உணவருந்தவும், சுற்றுலா செல்லவும், வீட்டு பயன்பாட்டு சாதனங்கள், நவநாகரிக ஆடைகள் போன்றவற்றை வாங்கவும், பிரத்யேக அன்பளிப்பு அட்டைகளை, பல நிறுவனங்கள் வெளியிடுகின்றன. சில்லரை விற்பனை நிறுவனங்கள், வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்க, பல்வேறு அன்பளிப்பு அட்டைகளை வழங்குகின்றன. இந்த வகையில், வர்த்தக மேம்பாடு, ஊக்கத்தொகை, ‘டாப் அப்’ என, பலவித கவர்ச்சிகரமான அன்பளிப்பு அட்டைகள், சந்தையில் புழக்கத்தில் உள்ளன. தள்ளுபடி சலுகைகளுடன் கிடைக்கும் இவ்வகை அன்பளிப்பு அட்டைகளுக்கு, இந்திய மக்களிடையே வரவேற்பு அதிகரித்து வருகிறது.
கடந்த, 2012 – 13ம் நிதியாண்டுடன் ஒப்பிடும்போது, 2015 – 16ம் நிதியாண்டில், அன்பளிப்பு அட்டைகளின் விற்பனை, 20 மடங்கு அதிகரித்து உள்ளது. இதே காலத்தில், அன்பளிப்பு அட்டையின் மதிப்பு, சராசரியாக, 850 ரூபாயில் இருந்து, 3,400 ரூபாயாக உயர்ந்துள்ளது என, க்விக்சில்வர் நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
பெருகும் வரவேற்பு‘அமேசான், ஸ்நாப்டீல், பிளிப்கார்ட்’ போன்ற ஏராளமான நிறுவனங்கள், பலதரப்பட்ட பொருட்கள் வாங்க, பிரத்யேக அன்பளிப்பு அட்டைகளை வெளியிட்டு உள்ளன. பல வங்கிகள், முதலீடு சார்ந்த அன்பளிப்பு அட்டைகளை அறிமுகப்படுத்தி உள்ளன. தற்போது, ‘இ – கிப்ட் கார்ட்’ எனப்படும், வலைதளம் வாயிலான அன்பளிப்பு அட்டைகளுக்கும் வரவேற்பு அதிகரித்து வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|