பதிவு செய்த நாள்
15 நவ2016
23:46
புதுடில்லி : மத்திய அரசு, 500, 1,000 ரூபாய் செல்லாது என, அறிவித்ததை அடுத்து, சரக்கு லாரிகளின் வாடகை, 50 சதவீதம் குறைந்து உள்ளது.
கடந்த மாதம், தீபாவளி பண்டிகை, கரீப் பருவ அறுவடை துவக்கம், மக்களிடம் பணப்புழக்கம் அதிகரிப்பு போன்றவற்றால், சரக்கு போக்குவரத்துக்கான லாரி வாடகை, 3 – 3.5 சதவீதம் அதிகரித்தது. இந்நிலையில், நவ., 8ல், பிரதமர் மோடி, 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, அறிவித்தார். இந்த திடீர் அறிவிப்பால், ஆங்காங்கே சரக்கு போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த லாரி ஓட்டுனர்கள் பாதிக்கப்பட்டனர்; கையில் பணம் இருந்தும், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு அல்லாடினர்; சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்துவதில், பல்வேறு சிரமங்களை சந்தித்தனர்.
இதே நிலை தொடர்ந்தால், 70 சதவீத சரக்கு லாரி போக்குவரத்து முடங்கும் என, தெரிய வந்ததை அடுத்து, சுங்கச்சாவடி கட்டணம் ரத்து செய்யப்பட்டு, அதை தொடர்ந்து, 18ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. புதிய கரன்சிகளை மாற்றுவதில் உள்ள சிரமங்களால், மக்கள் அனாவசிய செலவுகளை குறைத்து, அவசியமானவற்றுக்கு மட்டும் செலவிடுகின்றனர். இந்த அசாதாரண சூழல் காரணமாக, சரக்குகளை லாரிகளில் அனுப்புவது குறைந்துள்ளது.
அதே சமயம், சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள், பெட்ரோல் நிலையங்களில் மாற்றுவதற்காக, செல்லாத ரூபாய் நோட்டுகளை, லாரி ஓட்டுனர்களுக்கு தாராளமாக வழங்குகின்றன. வழக்கமாக, ஓட்டுனர்களுக்கு, 25 சதவீதத்தை முன்பணமாக தரும் சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள், இப்போது முழு தொகையையும் வழங்குகின்றன. அதே சமயம், மின்னணு முறையில் பணப் பரிவர்த்தனைகள் நடைபெறும் சரக்கு போக்குவரத்தில், பாதிப்பு குறைவாக உள்ளது.
போனும் தப்பவில்லை!கரன்சி தட்டுப்பாட்டால் மொபைல் போன் விற்பனை, 50 – 90 சதவீதம் சரிவடைந்து உள்ளது. குறிப்பாக, அதிக மதிப்புள்ள ஆப்பிள் போன் விற்பனை அடியோடு குறைந்துள்ளது. புதிய மொபைல் போன் அறிமுகம் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|